International
oi-Halley Karthik
தெஹ்ரான்: ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் அந்நாட்டுத் தலைநகர் தெஹ்ரானில் இன்று மிகப்பிரம்மாண்டமாகத் தொடங்கின. இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தலைவரின் ரத்தத்திற்கு பழி வாங்குவோம் என்று முழக்கமிட்டிருக்கிறார்கள். உள்நாட்டு மக்களின் எதிர்ப்பை பார்த்தால், அவ்வளவு சீக்கிரத்தில் இந்த போர் முடியாது என்பது போல இருக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதம் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட கமேனியின் உடல், போர்ச் சூழல் காரணமாக 4 நான்கு மாதங்கள் தாமதத்திற்குப் பிறகு தற்போது நல்லடக்கம் செய்யப்படுகிறது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி கிராண்ட் மொசல்லா (Grand Mosalla) வளாகத்தில் கமேனியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் கறுப்பு உடை அணிந்து, கண்ணீர் மல்கத் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மக்கள், “எங்கள் தலைவரின் இரத்தத்திற்குப் பழிவாங்குவோம்” என்றும், “அமெரிக்காவிற்கு வீழ்ச்சி தொடங்கிவிட்டது” எனவும் ஆக்ரோஷமாக முழக்கமிட்டனர்.
இந்த இறுதிச் சடங்கில் ஈராக் அதிபர் நிசார் அமதி, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சர்வதேசப் பிரதிநிதிகள் மற்றும் தூதர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். கமேனியுடன் அதே தாக்குதலில் உயிரிழந்த அவரது குடும்ப உறுப்பினர்களின் உடல்களும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன. கமேனியின் கருப்பு நிறத் தலைப்பாகை அவரது சவப்பெட்டியின் மீது அடையாளமாக வைக்கப்பட்டுள்ளது.
தெஹ்ரான், கோம் உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் ஊர்வலங்களைத் தொடர்ந்து, ஜூலை 9-ம் தேதி மஷாத் (Mashhad) நகரில் உள்ள இமாம் ரெசா நினைவிடத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. ஈரான் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படும் இந்த இறுதிச் சடங்கை முன்னிட்டு தெஹ்ரான் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கரம் வைத்திருக்கும் ஈரான்
கமேனியின் மரணம் ஈரானை கடுமையாக உசுப்பியிருக்கிறது. இதற்காக அமெரிக்காவின் ராணுவ மையங்கள் மீது சரமாரி தாக்குதலையும் கடந்த காலங்களில் நடத்தியிருந்தது. இருப்பினும் தற்போது இறுதி சடங்களில் மக்களின் கொந்தளிப்பை பார்க்கும்போது, அமெரிக்காவுடனான சண்டையை ஈரான் அரசு லேசில் விட்டு கொடுக்காது என்று தோன்றுகிறது.
உள்நாட்டு மக்களின் கொந்தளிப்பை சமாளிக்க அமெரிக்காவுடன் தொடர்ந்து சண்டை செய்துக்கொண்டே இருக்க வேண்டும். ஈரான் தனது பலத்தை நிரூபிக்க வேண்டும். எனவே இப்போதைக்கு ஈரான்-அமெரிக்கா போர் முடிவுக்கு வராது என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.