சமீபகாலமாக ரீரிலீஸ் படங்களில் எது ஓடும், எது ஓடாது என்ற கணக்கு எனக்கே புரியவில்லை. ‘கில்லி’, ‘படையப்பா’ படங்கள் மிகப்பெரிய ஹிட்டாகின்றன. ‘கில்லி’ ஓடியதால் ‘குஷி’ ஓடும் என்று எதிர்பார்த்தால், அது பெரிய அளவில் போகவில்லை.
தியேட்டரில் ரிலீஸான போது பெரிதாகப் போகாத ‘சச்சின்’ படம், இப்போது ரீ-ரிலீஸில் மாஸ் ஹிட்டாகிறது. இதனுடைய பிசினஸ் கணக்கு எனக்கே தெரியாததால், நானும் உங்களைப் போல ஒரு ஆடியன்ஸாகத்தான் காத்துக்கொண்டிருக்கிறேன்.

‘ரன்’ ரீரிலீஸானால் தியேட்டருக்குப் போய் பார்ப்பேன் என்று ஒரு பெரிய கூட்டமே காத்திருக்கிறது. அன்று தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் சார் எந்தவொரு காம்ப்ரமைஸும் இல்லாமல் மாதவன், மீரா ஜாஸ்மின் எனப் பெரிய கூட்டணியை அமைத்துக் கொடுத்தார்.
தெலுங்கு நடிகர் பிரபாஸை நான் சந்தித்த போது கூட, ‘ரன் படத்தை 8, 10 முறை பார்த்திருக்கிறேன், அதை எங்கு ஷூட் செய்தீர்கள்?’ என்று வியந்து கேட்டார். ஒரு இயக்குநருக்கு எப்போதும் இரண்டாவது படம் ரொம்ப முக்கியம்.
முதல் படம் குடும்பப் படமாக இருந்ததால், ‘இவர் குடும்பப் படம் மட்டும்தான் எடுப்பார்’ என்று முத்திரை குத்திவிடக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு இந்த கமர்சியல் ஆக்ஷன் ஸ்கிரிப்ட்டை எழுதினேன். இந்தக் கதை முழுக்க முழுக்க மாதவனுக்காகவே எழுதப்பட்டது. ரத்னம் சாரிடம் சொன்ன உடனே அவருக்கும் பிடித்து மேடியை கமிட் செய்தார்” என்றார்.