International
oi-Vigneshkumar
மாஸ்கோ: அமெரிக்கா ரஷ்யா நாடுகள் எப்போதுமே பரம எதிரிகள் தான். இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பல விஷயங்களில் மோதல் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க ராணுவ விமானம் ஒன்று திடீரென ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் தரையிறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமானம் ஏன் ரஷ்யாவுக்கு சென்றது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.
உலகின் இரு பெரும் சூப்பர் பவர் நாடுகளாக அமெரிக்காவும் ரஷ்யாவும் உள்ளன. இரு நாடுகளுக்குமே இடையே கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் மோதல் இருக்கும். அனைத்து விவகாரங்களிலும் 180 டிகிரி எதிர் நிலைப்பாட்டிலேயே இரு நாடுகளும் இருக்கும். அதிலும் உக்ரைன் போர் நிலைமையை மேலும் மோசமாக்கிவிட்டது.

அமெரிக்க விமானம்
இந்தச் சூழலில் தான் அமெரிக்க ராணுவ விமானம் ஒன்று ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள வ்னுகோவோ விமான நிலையத்தில் திடீரென தரையிறங்கியுள்ளது. இந்த விமானம் ஏன் ரஷ்யாவுக்கு சென்றது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. அந்த விமானம் அமெரிக்க விமானப்படை பயன்படுத்தும் போயிங் C-17 Globemaster III ரக போக்குவரத்து விமானமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட தூரத்திற்கு வீரர்கள், ராணுவ உபகரணங்கள் மற்றும் பல்வேறு சரக்குகளை கொண்டு செல்வதற்கு இந்த விமானங்களை தான் அமெரிக்கா பயன்படுத்தும்!
என்ன நடந்தது!
07-7181 என்ற பதிவு எண்ணை கொண்ட இந்த விமானம், லாட்வியா தலைநகர் ரிகாவில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை சுமார் 8.50 மணிக்கு புறப்பட்டு, காலை 10 மணியளவில் மாஸ்கோவில் தரையிறங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானம் மாஸ்கோ சென்றதற்கான காரணம் இதுவரை தெளிவாக தெரியவில்லை. விமானத்தில் யார் இருந்தனர்… எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்த தகவல் இல்லை. ஆட்களின்றி எதாவது தளவாடங்கள் எடுத்து செல்லப்பட்டதா.. அப்படி தளவாடங்கள் என்றால் அல்லது அதில் என்ன இருந்தது என்பதும் மர்மமாகவே உள்ளது.
விளக்கம் இல்லை
அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. விமானம் குறித்து தங்களுக்கு எந்த தகவலும் இல்லை என ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. இந்த விமானம் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி ரிகாவை சென்றடைந்துள்ளது. அதற்கு முன்னதாக, அமெரிக்காவின் கேம்ப் ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருந்து புறப்பட்டதாக கூறப்படுகிறது. அங்குதான் ஆண்ட்ரூஸ் விமானப்படைத் தளம் அமைந்துள்ளது.
அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் ஏர் போர்ஸ் ஒன் உள்ளிட்ட முக்கிய விமானங்களுடன் தொடர்புடைய இந்த ராணுவத் தளம், உயரதிகாரிகளுக்கான விமான போக்குவரத்தில் முக்கிய மையமாக செயல்படுகிறது. அதாவது அமெரிக்காவின் டாப் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய ராணுவ அதிகாரிகள் இந்த படைத்தளத்தில் இருந்தே கிளம்புவார்கள். எனவே, இந்த விமானத்திலும் முக்கிய புள்ளி இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இருப்பினும், அமெரிக்க ராணுவம் இதை உறுதி செய்யவில்லை.
உயர் அதிகாரிகள்
அதேநேரம் பொதுவாக உயரதிகாரிகளின் வெளிநாட்டு பயணங்களுக்கு முன்னதாக அவர்களின் வாகனங்கள், தகவல் தொடர்பு உபகரணங்கள் உள்ளிட்ட தளவாடங்களை கொண்டு செல்ல இது போன்ற விமானங்கள் பயன்படுத்தப்படுவதும் வழக்கம். எனவே, வரும் நாட்களில் அமெரிக்காவின் முக்கிய தலைவர்கள் மாஸ்கோ செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்க ராணுவ விமானத்தின் திடீர் வருகை பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது.. கடந்த சில வாரங்களாக, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்சத் மாஸ்கோ செல்லலாம் என்ற தகவல்கள் வெளியாகி வந்தன. அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையேயான உக்ரைன் போர் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது தேக்கமடைந்திருந்த நிலையில், பீட் ஹெக்சத் நேரடியாக ரஷ்யாவுக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என தெரிகிறது.
உக்ரைன் போர்
அப்படி இல்லை என்றால் அமெரிக்க சிறப்பு தூதர்கள் ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் உக்ரைன் போர் தொடர்பாக மற்றொரு சுற்று பேச்சுவார்த்தைக்காக மாஸ்கோ செல்ல உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக கூட இந்த விமானம் மாஸ்கோ சென்றிருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரியில்தான் கடைசியாக அமெரிக்க விமானம் ஒன்று நேரடியாக ரஷ்யா சென்றிருந்தது. அப்போது விட்காஃப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் விளாடிமிர் புதினை சந்தித்து உக்ரைன் போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.