’ராகுல் காந்தி கைது ஜனநாயகத்தின் மீதான கொடூர தாக்குதல்!’ – காங்கிரஸ் கண்டனம்

Spread the love

நீட் தேர்வு குளறுபடிகள் விவகாரத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி, டெல்லியில் பிரதமர் வீடு அருகே போராட்டம் நடத்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார், “பாசிச கொள்கைக்கு எதிராக புதுடெல்லியில் மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது காவல்துறையினர் மேற்கொண்ட வன்முறைத் தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களின் உரிமைக்காக குரல் கொடுத்ததற்காக ராகுல் காந்தியை பலவந்தமாகத் தடுத்து நிறுத்தி, தள்ளுமுள்ளு செய்து, தாக்கியதோடு மட்டுமல்லாமல், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால்  உள்ளிட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களை தரதரவென இழுத்துச் சென்று கைது செய்திருப்பது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலாகும்.

மாணவர்கள் மீது நேற்று நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற தடியடியின் அதிர்ச்சி இன்னும் அடங்காத நிலையில், இன்று அவர்களுக்காக குரல் கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர்களையே தாக்கி கைது செய்திருப்பது, மோடி அரசின் சர்வாதிகார மனநிலையையும், ஜனநாயக விரோத முகத்தையும் உலகம் முழுவதும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

கணபதி சிவக்குமார்
கணபதி சிவக்குமார்

ஜனநாயக நாட்டில் அமைதியான முறையில் போராடுவது அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமை. அந்த உரிமையைக் கூட பறித்து, எதிர்க்கட்சியின் குரலை காவல்துறையின் பலத்தால் அடக்கலாம் என்று நினைப்பது “வினாச காலே விபரீத புத்தி” என்ற பழமொழிக்கே எடுத்துக்காட்டாகும். மக்களின் பிரச்சினைகளுக்கு பதில் சொல்ல முடியாத ஆட்சி, எதிர்க்கட்சியினரை அடக்குமுறையால் மிரட்ட முயல்கிறது. ஆனால் வரலாறு சொல்லும் உண்மை ஒன்று உண்டு. அடக்குமுறை எப்போதும் நிரந்தர வெற்றியைப் பெற்றதில்லை; மக்கள் சக்தியே இறுதியில் வெற்றி பெற்றுள்ளது.

பாசிச மற்றும் நாசிச சிந்தனைகளை திணித்து, ஜனநாயக நிறுவனங்களை சீரழித்து வரும் ஆர்.எஸ்.எஸ்–பாஜக ஆட்சியின் அடக்குமுறைக்கு இந்திய மக்கள் விரைவில் ஜனநாயக வழியில் தக்க பதிலடி கொடுப்பார்கள். இந்தியாவில் மீண்டும் ஒரு மாபெரும் ஜனநாயகப் புரட்சி மலரும். மக்கள் தீர்ப்பே இறுதியான தீர்ப்பாக இருக்கும். ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீது நடத்தப்பட்ட இந்தக் கொடூரமான தாக்குதலையும், கைது நடவடிக்கையையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *