கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டு யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப்பகுதிகளுக்குள் நுழைவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டுப்பன்றிகள் விளை நிலங்களுக்குள் நுழைந்து பயிர்களைச் சேதப்படுத்துவது அதிகரித்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். காட்டுப்பன்றிகள் கிராமப்பகுதிகள் மட்டுமின்றி பி.என். புதூர், கோவைப்புதூர் உள்ளிட்ட நகரப்பகுதிகளிலும் சுற்றித் திரிகின்றன.
வனப்பகுதியில் வெளியே வந்த ஒரு காட்டுப்பன்றிக் கூட்டம் நகரப்பகுதியில் அமைந்துள்ள பி.என்.புதூரில் தங்கி விட்டது. இனப்பெருக்கம் காரணமாக காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்தது. இதனால் காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிந்ததால், அப்பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்பட்டது.
இதனால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் காட்டுப்பன்றிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனை ஏற்று வனத்துறையினர் அப்பகுதியில் கூண்டு வைத்து காட்டுப்பன்றிகளைப் பிடிக்க முயன்றனர். ஆனால் காட்டுப்பன்றிகள் ஓராண்டிற்கும் மேலாக கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வந்தது.

மேலும், காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்ததால், அப்பகுதி மக்களுக்கு இடையூறும் அதிகரித்து வந்தது. இதனால் காட்டுப்பன்றிகள் பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பி.என்.புதூர் பகுதியில் வனத்துறை அதிகாரிகள் சிக்காமல் போக்குகாட்டி வந்த 3 காட்டுப்பன்றிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
இதையடுத்து உயிரிழந்த மூன்று காட்டுப்பன்றிகளும் அரசு விதிகளுக்குட்பட்டு கிராம நிர்வாக அலுவலர், மாமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் முன்னிலையில் மருதமலை வனப்பகுதியில் புதைக்கப்பட்டன. மற்ற காட்டுப்பன்றிகளைப் பிடித்துச் சென்று வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.