ராகுல் வரும் வேளையில் ரெய்டு: 'மத்திய அரசு எங்களை மிரட்டப் பார்க்கிறது'- செல்வப்பெருந்தகை கண்டனம்

Spread the love

வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காகப் பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

இந்நிலையில் ராகுல் காந்தி பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்திருக்கும் நிலையில் தன்னை ‘சோதனை’ என்ற பெயரில் முடக்கி வைத்திருப்பதாகத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “இன்று மதிப்பிற்குரிய திரு. ராகுல் காந்தி அவர்கள் முக்கியமான தேர்தல் பிரசாரத்திற்காகத் தமிழ்நாடு வருகை தந்துள்ள நிலையில், வருமான வரித்துறையைச் சேர்ந்த இந்தி பேசும் அதிகாரிகள் ‘சோதனை’ என்ற பெயரில் என்னைச் சட்டவிரோதமாக முடக்கி வைத்துள்ளனர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இதன் மூலம் நான் எனது அரசியல் கடமைகளைச் செய்வதையும், மக்களைச் சந்திப்பதையும் அவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அரசியல் ரீதியாக மிக முக்கியமான தருணத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டமிட்ட நடவடிக்கை, ஜனநாயகச் செயல்பாடுகளை முடக்கி, எதிர்க்கட்சியினரின் பணிகளைப் பலவீனப்படுத்தும் ஒரு தெளிவான முயற்சியாகும்.

இந்தக் குறுக்கீட்டின் நேரமே அதன் உண்மையான நோக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இது சட்ட அமலாக்கம் அல்ல, மாறாக மிரட்டும் நடவடிக்கையாகும். எதிர்க்கட்சித் தலைவர்களையும் தொண்டர்களையும் அச்சுறுத்தி, அவர்களின் குரலை ஒடுக்கி, அரசியல் பங்கேற்பைக் கட்டுப்படுத்த மத்திய முகமைகளை அரசியல் ஆயுதங்களாகப் பயன்படுத்தும் ஒரு கவலைக்குரிய போக்கை இது பிரதிபலிக்கிறது.

அதிகாரத்தைத் தன்னிச்சையாகத் தவறாகப் பயன்படுத்துவது என்பது ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியங்களின் மீதான தாக்குதலாகும். சுதந்திரமான நடமாட்டம், கருத்து சுதந்திரம் மற்றும் நேர்மையான அரசியல் களம் ஆகியவை ஜனநாயகத்தில் பாதுகாக்கப்பட வேண்டியவை. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய நிறுவனங்கள், அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும்போது, அது பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைப்பதோடு நமது ஜனநாயக அமைப்பின் மாண்பையும் சீரழிக்கிறது.

அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை

அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த நடவடிக்கையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜனநாயகக் குரல்களை நசுக்க முயலும் இத்தகைய முயற்சிகளுக்கு எதிராக நான் உறுதியுடன் நிற்பேன் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறேன். மக்களுக்குச் சேவை செய்வதற்கும், நீதி மற்றும் சமத்துவத்தின் மதிப்புகளைக் காப்பதற்கும் எங்களை யாராலும், எந்த மிரட்டலாலும் தடுத்துவிட முடியாது” என்று பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *