International
oi-Prasanna Venkatesh
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய மக்கள் அனைவரும் பெட்ரோல், டீசல் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கும் நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக முடங்கியிருந்த ஈரான் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மீண்டும் தொடங்கியிருப்பது உலக எண்ணெய் சந்தையில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க கடற்படை விதித்திருந்த தடுப்புக் கோட்டை கடந்து, மூன்றாவது ஈரான் எண்ணெய் டேங்கர் வெற்றிகரமாக பயணித்துள்ளதாக வெளியான தகவல், உலக சந்தைகளில் எண்ணெய் விலையை குறைய முக்கிய காரணமாக மாறியுள்ளது. அமெரிக்கா அமைதி ஒப்பந்தத்தை முழுமையாக ஏற்று அனைத்து விதிகளையும் முழுமையாக கடைப்பிடிக்கிறது.

இரண்டு மாதங்களுக்கு பிறகு ஈரானுக்கு விடுதலை
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய போர், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் கச்சா எண்ணெய் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதில் ஈரானின் கச்சா எண்ணெய் சில காலம் ஏற்றுமதி தொடர்ந்தாலும், அமெரிக்காவின் கடற்படை முடக்கம் வந்த பின்பு மொத்தமாக முடங்கியது.
இந்த நிலையில், எண்ணெய் கப்பல்களின் நகர்வுகளை கண்காணிக்கும் TankerTrackers நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, கடந்த இரண்டு மாதங்களில் முதன்முறையாக ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மீண்டும் தொடங்கியுள்ளது. செயற்கைக்கோள் படங்கள் மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு தரவுகள் மூலம் இந்த நகர்வு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தடுப்புக்
ஈரான் தேசிய எண்ணெய் டேங்கர் நிறுவனத்துக்குச் சொந்தமான “Diona” மற்றும் “Hero 2” என்ற இரண்டு கப்பல்கள் மொத்தம் 38 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு அமெரிக்க கடற்படை கண்காணிப்பு பகுதிகளை கடந்து சென்றுள்ளன.
இதனைத் தொடர்ந்து, மேலும் 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றிய மூன்றாவது டேங்கரும் ஓமான் வளைகுடா பகுதியில் அமெரிக்க கடற்படை அமைத்திருந்த தடுப்புப் பகுதியை வெற்றிகரமாக கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியுள்ளன. ஆனால் மற்ற வளைகுடா நாடுகளின் இயக்கம் துவங்கியுள்ளதா என்றால் இல்லை என்பது தான் உண்மை.
வெள்ளிக்கிழமை முக்கிய பேச்சுவார்த்தை
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போரை முடிவுக்கு கொண்டுவரும் இறுதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுவிட்சர்லாந்தின் புர்கென்ஸ்டாக் மலைப்பகுதியில் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளன. ஏற்கனவே இரு நாடுகளும் போரை முடிவுக்கு கொண்டுவரும் அடிப்படை கட்டமைப்பு ஒப்பந்தத்தில் உடன்பாடு எட்டியுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்களில் ஒன்று ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக மீண்டும் திறப்பதாகும். உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடமாக இருக்கும் இந்த கடல் பாதை திறக்கப்படுவது, உலகளாவிய எரிசக்தி சந்தைகளுக்கு பெரிய நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.