India
oi-Halley Karthik
கோவா: ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்துதான் பலரும் கோவாவுக்கு போகிறார்கள். ஆனால், அப்படி கோவாவுக்கு சென்ற இளைஞர் ஒருவர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
கர்நாடகாவை சேர்ந்த சஹாஸ் மசாலி என்கிற இளைஞர் நண்பர்களுடன் கோவாவுக்கு சென்றிருக்கிறார். நன்றாக குடித்துவிட்டு.. பீச்சில் நாள் முழுக்க படுத்து கிடப்பதுதான் பிளான். ஆரம்பத்தில் எல்லாம் சரியாகத்தான் இருந்திருக்கிறது.

ஒரு கட்டத்தில் ஓவர் குஷியான மசாலி, பீச்சில் இருந்த பாறைகளின் மேல் அமர்ந்த செல்பி எடுக்க முயன்றிருக்கிறார்கள். அங்குதான் அந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது அலையின் வேகம் அதிகமாக இருக்கிறது என்றும், யாரும் கடலில் இறங்க வேண்டாம், குறிப்பாக கடற்கரையில் இருக்கும் பாறையின் மீது அமர வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரித்திருந்தனர். இந்த எச்சரிக்கையை மீறி மசாலி சென்றதால் ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்டார்.
நண்பர்கள் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தபோதே இது நடந்திருக்கிறது. உடனடியாக மசாலியை மீட்க காவல்துறையினர் முயன்றனர். ஆனால், கண் முன்னாடியே மசாலி காணாமல் போய்விட்டார். பின்னர் நீண்ட தேடுதலுக்கு பிறகு, மசாலி சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் கோவாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கவனிக்க வேண்டிய விஷயம்
என்னதான் ஒலிம்பிக் நீச்சல் வீரராக இருந்தாலும் கூட, ராட்சத அலையிலிருந்து தப்பிக்க முடியாது என்று, கடல் அலையில் சிக்குபவர்களை மீட்கும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏனெனில் தண்ணீர் என்பது வெறும் நீர் மட்டுமல்ல.. ஒரு கியூபிக் மீட்டர் தண்ணீரின் வெயிட் 1 டன் இருக்கும். அது நம்மீது விழும்போது, பெரிய லாரி மோதுவதை போல நம் உடல் நொறுங்கிவிடும். எலும்புகள் உடைந்து, உடனே நாம் சுயநினைவை இழந்து விடுவோம். அப்புறம் என்ன நடக்கிறது என்றே தெரியாது.
அதேபோல ராட்சத அலை எவ்வளவு வேகமாக கரையை நோக்கி வருகிறதோ! அவ்வளவு வேகமாக மீண்டும் கடலுக்குள் செல்லும். இதனால், அலையிலிருந்து தப்பிக்க முடியாது.
தண்ணீரில் மூழ்கிய உடன் நமக்கு முதலில் பயம்தான் ஏற்படும். இந்த பயம் காரணமாக, இதயம் வேகமாக துடித்து மூளைக்கு அதிக ஆக்சிஜனை அனுப்பும். ஆக்சிஜனை சுவாசிக்க வாயை திறப்போம்.. வாய் திறந்தால், தண்ணீர் உடலுக்குள் சென்று நுரையீரலை நிரப்பிவிடும். வெறும் தண்ணீர் மட்டும் போகாது.. கண்களுக்கு தெரியாத சிறிய மணல் துகள்களும் நுரையீரலுக்கு போய்விடும். இது மட்டும் நடந்தால் காப்பாற்றவே முடியாது. 1-2 நிமிடங்களில் மரணம் நிச்சயம்.
எனவே கடற்கரையில் குளிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். பருவமழை காலங்களில் கடல் அலை வழக்கத்தை விட தீவிரமானதாக இருக்கும். எனவே இதுபோன்ற நாட்களில் கடலில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.