அதுகுறித்து நம்மிடம் பேசிய த.வெ.க-வின் சீனியர் நிர்வாகிகள் சிலர், “அ.தி.மு.க-விலிருந்து வருபவர்களுக்கு, ஐந்து எம்.எல்.ஏ-க்களுக்கு ஒரு அமைச்சர் பதவி விகிதம், 25 எம்.எல்.ஏ-க்களுக்கு ஐந்து அமைச்சர் பதவிகள் தர பேசப்பட்டது. ஆனால், வேலுமணி தரப்பிலிருந்து எட்டு அமைச்சர் பதவிகளும், ஐந்து வாரியத் தலைவர் பதவிகளும் எதிர்பார்த்தனர். அதை த.வெ.க மேலிடம் ஏற்கவில்லை.
இழுத்துக்கொண்டே இருந்த பேச்சுவார்த்தையில், ஏழு அமைச்சர் பதவிகள் வரை தருவதற்கு முன்வந்தது த.வெ.க மேலிடம். வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், மரகதம் வெற்றிவேல் ஆகியோர் அமைச்சர் பதவி ஏற்கவும் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

அந்தச் சூழலில், கரூர் தொகுதியில் வெற்றிப்பெற்றிருக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் அமைச்சர் பதவியை எதிர்பார்த்தார். அதனால், அ.தி.மு.க-வினருக்கு எட்டு அமைச்சர் பதவிகள் ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தது வேலுமணி தரப்பு. ‘ஐந்து எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவிகளை ஒதுக்குகிறீர்கள். எங்களுக்கு எட்டு ஒதுக்க மாட்டீர்களா…’ என்று உரிமையோடு கேள்வியும் கேட்டனர்.
அந்தநிலையில்தான், ‘அ.தி.மு.க., அ.ம.மு.க-விலிருந்து வந்தவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால், குதிரை பேரம் நடந்திருப்பது உர்ஜிதமாகிவிடும். நாங்கள் நிச்சயமாக சி.பி.ஐ விசாரணைக் கேட்போம்’ என்று தடாலடித்தார் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்.