தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமாரிடம் பேசியபோது, ”5 ஆண்டுகள் தற்காலிகமாகப் பணிபுரிந்த ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படுவதோடு தற்காலிகமாகப் பணிபுரிந்த காலத்திற்கு, நிரந்தர ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் பெற்றுத் தரப்படும் என்று த.வெ.க-வின் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார்கள்.
2011-2012-ல் நியமிக்கப்பட்ட 16,549 பகுதிநேர ஆசிரியர்களில் பலர் மரணம் அடைந்ததாலும், ஓய்வு பெற்றதாலும் தற்போது 11,773 பேர் பணியாற்றி வருகிறோம். பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க நாங்கள் வைத்த கோரிக்கைக்கு யானைப்பசிக்கு சோளப்பொறிபோல 2014-ல் ரூ 2000, 2017-ல் ரூ 700, 2021-ல் ரூ 2,300 எனக் கூடுதலாக்கி ரூ 10,000 வழங்கப்பட்டது.

பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து 2024-ல் ரூ. 2500-ம், 2026-ல் ரூ. 2500 என 2026 ஜனவரியிலிருந்து ரூ. 15,000 வழங்கப்பட்டு வருகிறது. வேலைக்குச் சேர்ந்தது முதல் மே மாதத்திற்கான ஊதியம் தந்ததில்லை, நடப்பு ஆண்டில்தான் மே மாதம் சிறப்பு உதவித்தொகை என ரூ. 10,000 வழங்கப்பட்டது.
15 ஆண்டுகளைக் கடந்த பிறகுதான் எங்கள் ஊதியம் ரூ. 15,000-த்திற்கு வந்துள்ளது. அதேநேரம், இதே பாடங்களுக்கு சிறப்பாசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் ஒரு லட்சம் வரை ஊதியம் பெறுகிறார்கள். ஒரே தகுதியுள்ள எங்களுக்கும் அதேபோல் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்கிறோம்.
எங்களுக்கு ஊதியம் வழங்க ஆண்டுக்குச் சுமார் ரூ. 200 கோடி ரூபாய் செலவாகிறது. காலமுறை ஊதியம் வழங்க கூடுதலாக ரூ. 300 கோடி ஒதுக்கினால்போதும்.
தற்போது உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 1,328 பேரைப் புதிதாக நியமிக்க உள்ளார்கள். அதற்கு உடற்கல்வி பாடத்தில் 15 ஆண்டு அனுபவத்துடன் பணிபுரிகின்ற 3,843 பகுதிநேர ஆசிரியர்களையே பணி நிரந்தரம் செய்யலாம்.
இதைப் போலவே மற்ற பாடங்களில் 15 ஆண்டுகளைக் கடந்த பகுதிநேர ஆசிரியர்கள்களையும் பணி நிரந்தரம் செய்யலாம்.