புதுக்கோட்டை: 'பேய் விரட்டும்' போராட்டம்; எலுமிச்சம்பழம், தாயத்து, சிலுவை கட்டிய த.வா.க-வினர்!

Spread the love

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அன்னவாசல் ஒன்றியம் மாங்குடி கிராமத்தில் கடந்த 1995-ஆம் ஆண்டு அரசு துணை சுகாதார நிலையம் திறக்கப்பட்டது. சுமார் 5,000 மக்கள் தொகை கொண்ட இந்த கிராமத்தில், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அவசர மருத்துவ உதவிக்காக இந்த மையத்தையே நம்பியிருந்தனர்.

இந்த நிலையில், கடந்த பல மாதங்களாக இந்த சுகாதார நிலையம் பூட்டியே கிடந்தது. இதனால் அவசர மருத்துவ உதவிக்கு வரும் பொதுமக்கள் தினமும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதுகுறித்து மாவட்ட சுகாதார அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு அளித்தபோதெல்லாம், அங்கு 3 செவிலியர்கள் பணியில் இருப்பதாக வருகைப் பதிவேட்டைக் காட்டி அதிகாரிகள் கூறி வந்தனர்.

த.வா.க. வினோத ஆர்ப்பாட்டம்!

ஆனால், நேரில் யாரும் பணிக்கு வரவில்லை. இதனிடையே, சமீபத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் ஒரு செவிலியர் கலந்துகொண்டு “நான் தான் இந்த மையத்தின் செவிலியர்” எனக் கூறியுள்ளார். எனினும், அவர் தினமும் பணிக்கு வருவதில்லை என்பது கிராம மக்களுக்குத் தெரியவந்தது.

இதையடுத்து, தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மாங்குடி கிராம மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்த முடிவு செய்தனர். “அதிகாரிகள் சொல்வது போல் பணியாளர்கள் உள்ளே இருந்தால், மையம் ஏன் பூட்டிக்கிடக்கிறது? ஒருவேளை இங்கு பேய்கள் குடியேறியிருப்பதால் செவிலியர்கள் வர அச்சப்படுகிறார்களா?” எனக் கேள்வி எழுப்பிய அவர்கள், சுகாதார நிலையத்தில் ‘பேய் விரட்டும் போராட்டம்’ நடத்தப்படும் என அறிவித்தனர்.

அதன்படி, த.வா.க. மாநில இளைஞரணி செயலாளர் நியாஸ் தலைமையில், மும்மத ஆன்மீக தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் ( ஆகஸ்ட்- 22,) காலை அங்கு திரண்டனர்.

போராட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பூட்டிக்கிடந்த அரசு துணை சுகாதார நிலையம் நேற்று அவசர அவசரமாகத் திறக்கப்பட்டுச் செயல்படத் தொடங்கியது.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “நாங்கள் பேய் விரட்ட வருகிறோம் என்றதும் சுகாதார நிலையத்தைப் பிடித்திருந்த பேய்கள் ஓடிவிட்டன.

த.வா.க. வினோத ஆர்ப்பாட்டம்!

இனிமேல் பேய்கள் உள்ளே வராமல் இருக்க, மந்திரிக்கப்பட்ட எலுமிச்சம்பழம், பச்சை கயிற்றில் கட்டப்பட்ட தாயத்து மற்றும் சிலுவையை நுழைவாயில் அருகே சுவரில் தொங்கவிடுகிறோம். இனி பொதுமக்கள் மருத்துவ உதவி பெறலாம்” எனத் தெரிவித்தனர்.

மேலும், “இன்றைய போராட்டத்தை முடக்க மட்டுமே மையத்தைத் திறந்துவிட்டு, நாளை மீண்டும் மூடினால் எங்களது போராட்டம் வேறு விதமாக இருக்கும்” என்றும் எச்சரித்தனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அலுவலர்களிடம் கேட்டபோது, “செவிலியர் பற்றாக்குறை காரணமாக இங்கு பணியாற்றியவர்கள் மாற்றுப் பணிக்குச் சென்றுவிட்டனர். இங்குள்ள காலிப்பணியிடங்களை நிரப்பினால் மட்டுமே இதற்கு முழுமையான தீர்வு கிடைக்கும்” என்று தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *