’ரூ.2 லட்சத்தில் கமிஷனருக்கு செல்போன் வாங்குவதா?’ – கோவை மாநகராட்சி சர்ச்சை

Spread the love

கோவை மாநகராட்சி பயன்பாட்டிற்கு செல்போன் மற்றும் கேமரா வாங்கியதில் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

இது குறித்து நம்மிடம் பேசிய சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் தியாகராஜன், “கோவை மாநகராட்சியில் கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் 2026 ஜூன் வரை நடைபெற்ற திட்டப் பணிகளுக்குச் செலவிடப்பட்ட தொகை தொடர்பாக, மாநகராட்சி கணக்குப் பிரிவில் பராமரிக்கப்படும் கணக்கு பதிவேடு ஆவணங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டிருந்தேன்.

அதன்படி மொத்தம் 9,834 பக்க ஆவணங்களைப் பெற்றேன். அந்த ஆவணங்களைப் பார்த்தபோது, பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன.

தியாகராஜன்
தியாகராஜன்

‘வீணடிக்கப்படும் மக்கள் வரிப்பணம்’

மாநகராட்சி விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறைக்கு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு நிகான் கேமரா வாங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.4 லட்சத்து 30 ஆயிரத்து 500 என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த விலை அதிகமாகத் தெரிந்ததால் ஆன்லைனில் அக்கேமரா விலையைத் தேடிப் பார்த்தபோது, ரூ.2.45 லட்சம் மட்டுமே இருப்பது தெரியவந்தது. பின்னர் மாநகராட்சி கேமரா வாங்கிய அதே கடையில், அதே வசதிகளுடன் கூடிய அதே கேமராவிற்கான விலைப்பட்டியலைக் கேட்டு வாங்கினேன்.

அதிலும், அதன் விலை ரூ.2.45 லட்சம் மட்டுமே. ஒரே வசதிகளுடன் கூடிய கேமராவிற்கு எப்படி ரூ. 2 லட்சம் வித்தியாசம் இருக்கும்? இதில் ஊழல் நடைபெற்றுள்ளது. ஒரு சிறிய பொருள் வாங்கியதிலேயே இவ்வளவு ஊழல் என்றால், நூற்றுக்கணக்கான கோடியில் நடைபெற்ற திட்டங்களில் எவ்வளவு ஊழல் நடந்திருக்கும்?

கேமரா விலை வித்தியாசம்
கேமரா விலை வித்தியாசம்

இதேபோல 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாநகராட்சி ஆணையாளர் பயன்பாட்டிற்காக ரூ.1.69 லட்சத்தில் ஒரு ஸ்மார்ட் போன் வாங்கப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தி வந்த ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் பணியிட மாறுதலில் சென்றபோது, அதனைத் திரும்ப ஒப்படைக்கவில்லை.

இதனால் புதிய ஆணையாளர் பயன்பாட்டிற்காக ரூ.2 லட்சத்தில் புதிய ஸ்மார்ட் போன் வாங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவது ஏற்புடையது அல்ல” எனக் குற்றம்சாட்டினார்.

செல்போன் வாங்கிய செலவு
செல்போன் வாங்கிய செலவு

‘புகார் குறித்து விசாரணை’

கேமரா விவகாரம் குறித்து மாநகராட்சி பி.ஆர்.ஓ. சையதிடம் விளக்கம் கேட்டோம். “நான் புதிதாக வந்துள்ளேன். கேமரா வாங்கப்பட்டது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இது குறித்து விசாரித்து சொல்கிறேன்” என்றார்.

செல்போன் விவகாரம் குறித்து முன்னாள் ஆணையாளர் சிவகுரு பிரபாகரனிடம் விளக்கம் கேட்டோம். “நான் அனைத்து பொருட்களையும் ஒப்படைத்துவிட்டேன். அந்தப் போன் எங்கே இருக்கிறது என விசாரித்து சொல்கிறேன்” என்றார்.

மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, “ஏற்கனவே இருந்த போன் நான்கைந்து ஆண்டுகள் பழையது. அதனால் அடிக்கடி ஹேங்க் ஆகி வந்ததால் பயன்படுத்துவதற்குச் சிரமமாக இருந்ததால், புதிய போன் வாங்கப்பட்டது. பிப்ரவரி மாதம் போன் வாங்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து விசாரிக்கப்படும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *