ரூ.20 லஞ்ச வழக்கு: 30 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த தீர்ப்பு! – Kumudam

Spread the love

ரூ.20 லஞ்சம் வாங்கியதாகக் கூறப்பட்ட வழக்கில் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் மாநில அரசு ஊழியர்கள் இருவரை உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது. லஞ்சம் கேட்கப்பட்டது நிரூபிக்கப்படாத நிலையில், வெறும் பணம் பறிமுதல் செய்யப்பட்டதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தண்டனை வழங்க முடியாது என்று தெரிவித்து நீதிபதிகள் உஜ்ஜல் புயான் மற்றும் அதுல் எஸ்.சந்தூர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

1996-ல் தொடங்கிய வழக்கின் பின்னணி

கடந்த 1996-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு மாணவர் ஒருவர் கல்விச் சலுகைக்கான வருமானச் சான்றிதழ் பெறச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த எழுத்தர் ரூ.120 (எழுத்தருக்கு ரூ.100, பியோனுக்கு ரூ.20) லஞ்சம் கேட்டதாகக் கூறி, அம்மாணவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் தடவிய பணத்தைக் கொடுத்து அனுப்பிய நிலையில், சான்றிதழைப் பெற்றுக் கொண்ட மாணவர் ரூ.20-ஐ மட்டும் பியோனிடம் கொடுத்துள்ளார். சோதனை நடத்திய அதிகாரிகள் பியோனிடம் இருந்து ரூ.20-ஐ பறிமுதல் செய்தனர். ஆனால், எழுத்தரிடம் இருந்து ரூ.100 பறிமுதல் செய்யப்படவில்லை.

சாட்சியத்தில் நிலவிய முரண்பாடுகள்

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசுத் தரப்பு சாட்சியங்களில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டியது. விசாரணையின் போது, பியோன் தனியாளாக எந்த லஞ்சமும் கேட்கவில்லை என்பதை அம்மாணவரே ஒப்புக்கொண்டார். மேலும், அடுத்த நாள் ஈத் பண்டிகை என்பதால் மாணவரே விருப்பப்பட்டு ரூ.20 கொடுத்ததாக பியோன் கூறிய விளக்கம் மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது என நீதிமன்றம் கருதியது.

அத்துடன், முழுத் தொகையையும் லஞ்சமாகக் கேட்கும்போது கொடுக்குமாறு அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டும், மாணவர் ஏன் ரூ.20 மட்டும் கொடுத்தார், எழுத்தர் அருகில் இருந்தும் மீதிப் பணத்தை ஏன் கொடுக்கவில்லை போன்ற கேள்விகள் அரசுத் தரப்பு வழக்கின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தின.

உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், ஆரம்பக்கட்ட லஞ்சக் கோரிக்கையே நிரூபிக்கப்படாத போது, வெறும் பணம் பறிமுதல் செய்யப்பட்டதை மட்டும் வைத்துத் தண்டிக்க முடியாது என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். மேலும், எழுத்தர் மீது வழக்கு தொடர வழங்கப்பட்ட அனுமதியும் தகுதியற்ற அதிகாரியால் வழங்கப்பட்டதால் செல்லாது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இதனைத் தொடர்ந்து, விசாரணை நீதிமன்றம் மற்றும் குஜராத் உயர் நீதிமன்றம் அளித்த தண்டனைத் தீர்ப்புகளை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், இரு ஊழியர்களையும் வழக்கில் இருந்து முழுமையாக விடுவித்து உத்தரவிட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *