இந்தியாவின் இட ஒதுக்கீடுக் கொள்கையில் “கிரீமிலேயர்’ வரம்பை நிர்ணயிப்பது தொடர்பான மிக முக்கிய வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் பிற்படுத்தப்பட்ட சமூகமான ‘குறும்பா’ சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மின்சாரத் துறையில் உதவிப் பொறியாளராக தேர்வாகியும், அவரது குடும்ப வருமானம் 20 லட்சம் ரூபாய் என்பதால் அவரை இட ஒதுக்கீட்டுப் பலன் பெற முடியாத ‘கிரீமிலேயர்’ வரம்பிற்குள் சேர்த்த மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி உத்தரவை உச்ச நீதிமன்றம் தற்பொழுது கையில் எடுத்துள்ளது.
இந்த உத்தரவை ஏற்கெனவே உறுதி செய்திருந்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வு முன்பு விரிவான விசாரணைக்கு வந்தது.
கர்நாடக மின்சாரத் துறையில் உதவிப் பொறியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட அந்த நபரின் பெற்றோர்கள் இருவரும் அரசு ஊழியர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் கூட்டு ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாய் வருவதைச் சுட்டிக்காட்டி, அவர் ஓபிசி இட ஒதுக்கீட்டுப் பலன்களைப் பெறத் தகுதியற்றவர் என மாவட்ட நிர்வாகம் ‘கிரீமிலேயர்’ சான்றிதழ் வழங்கி இருந்தது.

இதனை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த கர்நாடகா உயர் நீதிமன்றமும், மாவட்ட நிர்வாகத்தின் முடிவே சரியானது எனத் தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட போது, கிரீமிலேயர் விலக்கு விதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட பிற மனுக்களும் இதனுடன் ஒன்றாக இணைத்து இன்று விசாரிக்கப்பட்டன.
இன்றைய விசாரணையின் போது, சமூக நகர்வு குறித்து நீதிபதி பி.வி. நாகரத்னா, “இட ஒதுக்கீடு மூலம் ஒரு தலைமுறை சமூக முன்னேற்றத்தை அடைந்த பிறகு, அதே குடும்பத்தினர் அந்தப் பலன்களை அடுத்த தலைமுறைக்கும் கோரிக் கொண்டிருந்தால், நாம் எப்போதுமே இட ஒதுக்கீட்டு முறையிலிருந்து வெளியேற முடியாது” எனக் கவலை தெரிவித்தார்.
மேலும், “பெற்றோர் இருவரும் ஐஏஎஸ் அதிகாரிகளாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் ஏற்கெனவே நல்ல பொருளாதார மற்றும் உயர்ந்த சமூக நிலையில் இருக்கிறார்கள். கல்வி மற்றும் பொருளாதார அதிகாரம் கிடைக்கும் போது, அங்கே சமூக நகர்வு இயல்பாகவே நடந்துவிடுகிறது.