நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக லால்குடி தொகுதியில் போட்டியிட்டார்.
ஆனால், அதிமுக வேட்பாளர் லீமா ரோஸிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இதனையடுத்து சீனியர் அரசியல் தலைவரான கு.ப.கிருஷ்ணனுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் பதவியை வழங்கியுள்ளார் தவெக தலைவர் விஜய்.
திருச்சி லால்குடியைச் சேர்ந்தவர் கு.ப.கிருஷ்ணன். 1991-1996 காலக்கட்டத்தில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் விவசாயத் துறை அமைச்சராக இருந்தார்.
2011-2016-ல் ஆலங்குடி எம்.எல்.ஏவாக இருந்தவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அமமுக-வை டிக் செய்தார்.

அங்கே, அவருக்கு நினைத்த வளர்ச்சி கிடைக்காததால், கடந்த ஜனவரி மாதம், தவெக-வில் இணைந்தார்.
சட்டமன்றத் தேர்தலில், போட்டியிட முதலில் அவருக்கு கொடுக்கப்பட்ட தொகுதி, முசிறி. ஆனால், அவர் விரும்பித் தேர்ந்தெடுத்த தொகுதி, லால்குடி.
ஆனால், லால்குடியில் இவர் வெற்றி பெற முடியவில்லை. முசிறியில் போட்டியிட்ட விக்னேஷ் வெற்றி பெற்றுவிட்டார்.
இந்த நிலையில், கிருஷ்ணனுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.