Last Updated:
விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நான்கு புதிய அதிநவீன டயாலிசிஸ் இயந்திரங்கள் மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.
விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி கிளப் சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பிலான நான்கு அதிநவீன டயாலிசிஸ் இயந்திரங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. இந்த மனிதநேய உதவியால் பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏழை மற்றும் எளிய மக்களின் மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்வதில் அரசு மருத்துவமனைகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. அந்த வகையில், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிறுநீரக பாதிப்பால் அவதிப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கேற்ப போதுமான அளவில் டயாலிசிஸ் இயந்திரங்கள் இல்லாததால், நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வந்தது.
இந்த தேவையை உணர்ந்த ரோட்டரி கிளப் சார்பில், ரூ.50 லட்சம் மதிப்பிலான நான்கு புதிய அதிநவீன டயாலிசிஸ் இயந்திரங்கள் மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன. இந்த இயந்திரங்களின் பயன்பாட்டை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆளுநர் சிவசுந்தரம், சென்னை ரோட்டரி கிளப் கவர்னர் ஸ்ரீதர் மற்றும் ஸ்டேட் பாங்க் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ரோட்டரி கிளப் வழங்கியுள்ள இந்த புதிய டயாலிசிஸ் இயந்திரங்களின் மூலம், காத்திருப்பு பட்டியல் குறைவதுடன் தினமும் கூடுதலான நோயாளிகளுக்கு இலவசமாக டயாலிசிஸ் சிகிச்சை வழங்க முடியும் என மருத்துவமனை நிர்வாகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
மேலும், பொதுமக்கள் மத்தியில் டயாலிசிஸ் சிகிச்சை குறித்த பயமும் தவறான புரிதல்களும் அதிகமாக காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை மறுவாழ்வு அளிக்கும் முக்கியமான மருத்துவ உதவியாக இருப்பதாகவும், யாரும் அச்சப்படாமல் சிகிச்சையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.