India
oi-Vigneshkumar
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் நடந்த திருட்டு குறித்த விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், பல திடுக் தகவல்கள் வெளியாகி வருகிறது. அயோத்தி ராமர் கோயிலின் உண்டியல் காணிக்கையை எண்ணும் மையத்தில் ரூ.500 நோட்டுகளை திருடுவதில் தொடங்கிய மோசடி, பின்னர் ரூ.2 முதல் ரூ.3 கோடி என மிக பெரிய மோசடியாக மாறியுள்ளது சிறப்பு விசாரணைக் குழு விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். அவர்கள் பெரிய தொகையைக் காணிக்கையாகவும் கொடுக்கிறார்கள். ராமருக்காக பக்தர்கள் கொடுத்த காணிக்கையில் பெரியளவில் திருட்டு நடந்துள்ளது இப்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

விசாரணை தீவிரம்
பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள், பாதுகாப்பு நடைமுறைகளில் இருந்த குறைபாடுகளை பயன்படுத்தியே இந்த திருட்டை பல மாதங்களாக அரங்கேற்றியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாகச் சிறப்பு விசாரணைக் குழு பலரைக் கைது செய்துள்ள நிலையில், விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ரூ.500ல் தொடங்கிய திருட்டு
இது தொடர்பாக விசாரணை அதிகாரிகள் கூறுகையில், “காணிக்கை எண்ணும் பணியில் இருந்த ஆறு ஊழியர்கள் பணியில் சேர்ந்த இரண்டு அல்லது மூன்று மாதங்களிலேயே திருட்டை தொடங்கியுள்ளனர். ஆரம்பத்தில் தங்களது உடைகளுக்குள் ஓரிரு ரூ.500 நோட்டுகளை மறைத்து வெளியே எடுத்துச் சென்றுள்ளனர். அதை யாரும் கண்டுபிடிக்கவில்லை. இதனால் அவர்களுக்கு தைரியம் வந்துவிட்டது. பணக்கட்டுகளை அப்படியே திருட தொடங்கியுள்ளனர். காலப்போக்கில் இந்த மோசடி ரூ.2 முதல் ரூ.3 கோடி வரை போனது. இதை அவர்கள் விசாரணையில் ஒப்புக்கொண்டனர்” என்கிறார்கள்.
அங்கு சிசிடிவி கேமரா இருந்தும் கூட அதை முறையாக கண்காணிக்காமல் விட்டதே இந்த மோசடிக்கு மிக முக்கிய காரணமாக இருந்ததாக அதிகாரிகள் கூறுகிறார்கள். சிசிடிவி வீடியோவை கண்காணிக்க வேண்டிய கண்ட்ரோல் ரூமில் பல நேரங்களில் ஊழியர்கள் இல்லாமல் காலியாக இருந்துள்ளது. இதனால் பணத்தை வெளியே எடுத்துச் செல்வது எளிதாக இருந்ததாக கூறப்படுகிறது. பாதுகாப்பு நடைமுறைகள் இருந்தபோதிலும் அவை முறையாக அமல்படுத்தப்படாததே இந்த மோசடிக்கு காரணமாக இருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பாதுகாப்பு குளறுபடிகள்
ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்திர அறக்கட்டளை மற்றும் எஸ்பிஐ இடையே செய்யப்பட்ட ஒப்பந்தப்படி, உண்டியலை திறப்பது முதல் பணத்தை எண்ணுவது வரை பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருந்தன. பயோமெட்ரிக் வருகைப் பதிவு, சீருடை, தனிப்பட்ட பொருட்களுக்கு தடை, தீவிர சோதனை, சிசிடிவி கண்காணிப்பு கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. ஆனால், இவை அனைத்தும் வெறும் பேப்பரில் மட்டுமே இருந்தது. இவற்றில் பல நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருட்டு
குறிப்பாக திடீர் சோதனைகள் அவ்வப்போது நடத்தப்பட வேண்டும்.. உடலில் எதாவது மறைத்து வைத்திருக்கிறார்களா என்பதை கண்டறிய சோதனை நடத்தப்பட வேண்டும் போன்ற விதிகள் செயல்படுத்தப்படவில்லை. இதுவே ஊழியர்களுக்கு பணத்தை எளிதில் வெளியே கொண்டு செல்ல வாய்ப்பாக அமைந்ததாக கூறப்படுகிறது.
மேலும், கைது செய்யப்பட்ட ஊழியர்களில் பலர் பரிந்துரையின் அடிப்படையிலேயே பணியில் சேர்ந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களில் ஒருவரான மனீஷ் குமார் யாதவ், தனது மாமாவின் பரிந்துரையின் பேரில் பணியில் சேர்ந்துள்ளார். மே 11ம் தேதி முதல் அவர் தொடர்ந்து பணத்தை திருடிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியிருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.
அதிரடி ரெய்டு
கைது செய்யப்பட்டவர்கள் அயோத்தி மற்றும் பிற பகுதிகளில் சொத்துகள் வாங்கியிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் குற்றவாளிகள் தொடர்புடைய இடங்களில் இருந்து ரூ.79 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கிடையில், ராமர் கோயில் அறக்கட்டளையின் முன்னாள் உறுப்பினர் அனில் மிஸ்ராவையும் இந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. திருட்டு குறித்து முன்கூட்டியே தெரிந்தும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் அவருக்கும் இதில் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

