எளிய இலக்கோடு தொடங்குவோம்: ஓய்வுக்காலத்தில் மாதம் ரூ. 50,000 வருமானம்!
இன்றைய தேதியில் ரூ. 50,000 என்பது பெரிய தொகையாக தெரியாமல் போகலாம். ஆனால், சொந்த வீடு வைத்திருக்கும் ஒரு முதிய தம்பதிக்கு, இந்தியாவின் வீட்டுச் செலவுகள், மருத்துவம், ஆன்மிகச் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்குகளுக்கு இந்தத் தொகை தாராளமாகப் போதும்.
மாதம் ரூ. 50,000 பெற, வருடத்திற்கு ரூ. 6 லட்சம் தேவை. உலகளாவிய நிதி ஆலோசகர்கள் 4% வித்ட்ராயல் விதியை பரிந்துரைக்கிறார்கள். இதன்படி, உங்களிடம் ரூ. 1.5 கோடி ரிட்டையர்மென்ட் ஃபண்ட் இருந்தால், ஆண்டுக்கு ரூ. 6 லட்சத்தை தைரியமாக எடுக்கலாம். மீதமுள்ள பணமும் முதலீட்டிலேயே நீடித்து வளர்ந்து கொண்டே இருக்கும்.
இப்போது அடுத்த கேள்வி: “ஓய்வு பெறுவதற்குள் என்னால் ரூ. 1.5 கோடியை சேர்க்க முடியுமா?”
வளைகுடா NRI-களால் இது நிச்சயம் சாத்தியம்!
40 வயதுள்ள ஒரு NRI, இந்திய பங்குச்சந்தை மியூச்சுவல் ஃபண்டுகளில் ‘எஸ்.ஐ.பி’ (SIP) முறையில் மாதம் ரூ. 20,000 முதலீடு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்திய பங்குச்சந்தையின் நீண்டகால சராசரி வளர்ச்சியான 12% லாபத்தைக் கணக்கிட்டால், அடுத்த 20 ஆண்டுகளில் இந்த முதலீடு கிட்டத்தட்ட ரூ. 2 கோடியாக விஸ்வரூபம் எடுக்கும்! ஒருவேளை, சந்தை சுணங்கி 10% லாபம் கொடுத்தால் கூட, உங்கள் கையில் ரூ. 1.5 கோடி இருக்கும்!
இதுதான் கூட்டு வட்டியின் (Compounding) அசாத்திய பவர்!
பலரும் நினைப்பது போல, அதிக பணம் சம்பாதிப்பதால் மட்டும் யாரும் கோடீஸ்வரன் ஆவதில்லை. பணத்திற்கு வளர போதுமான கால அவகாசம் தருவதில்தான் ரகசியமே ஒளிந்திருக்கிறது. ஆரம்ப வருடங்களில் வளர்ச்சி மெதுவாகத் தெரியும். போகப்போக, முதலீட்டின் லாபத்தில் இருந்து மேலும் லாபம் முளைக்கும். ஒரு கட்டத்தில், நீங்கள் முதலீடு செய்த அசலை விட, கூட்டு வட்டியால் கிடைத்த லாபமே விஸ்வரூபம் எடுத்து நிற்கும். அதனால்தான், சரியான முதலீட்டை தேடி அலைவதை விட, சீக்கிரமாக முதலீடு செய்யத் தொடங்குவது முக்கியம்!
ரிட்டையர் ஆனதும், இந்த மொத்தப் பணத்தையும் ஒரே அடியாக எடுக்காமல் ‘எஸ்.டபிள்யூ.பி’ (SWP) முறையில் மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம், மீதிப் பணம் முதலீட்டில் வளர்ந்து கொண்டிருக்க, உங்களுக்கு மட்டும் மாதம் ரூ. 50,000 பென்ஷன் போல வங்கிக் கணக்கிற்கு வந்துகொண்டே இருக்கும்.