ரூ.77 லட்சம் தருகிறேன்: தமிழக முதல்வர் விஜய்யின் ஏ.ஐ வீடியோவை பயன்படுத்தி பெண்ணிடம் 12 லட்சம் மோசடி

Spread the love

ஏழைகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் விஜய் பேசவது போன்ற ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது. அந்த வீடியோவை மும்பை வசாய் பகுதியை சேர்ந்த வத்சலா(66) என்ற பெண் பார்த்து விஜய்யிடம் நிதியுதவி கோர முடிவு செய்தார். இதற்காக அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த மொபைல் போன் நம்பருக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அந்த நம்பரில் பேசிய நபர் வேறு ஒரு மொபைல் நம்பரை கொடுத்து அந்த எண்ணில் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.

இரண்டாவது போன் நம்பருக்கு தொடர்பு கொண்டபோது அதில் பேசிய நபரிடம் ரூ.5 லட்சம் நிதியுதவி செய்யும்படி அப்பெண் கேட்டுக்கொண்டார். உடனே அதற்கான விண்ணப்ப கட்டணமாக ரூ.5 ஆயிரம் செலுத்தும்படி கேட்டுக்கொண்டார். பின்னர் அப்பெண்ணை தொடர்பு கொண்ட நபர் வெளிநாட்டில் இருந்து ரூ.77 லட்சம் கிடைக்க இருப்பதாக தெரிவித்தார். ஆனால் அந்த தொகையைப் பெற வரி மற்றும் இதர கட்டணங்களை செலுத்தவேண்டும் என்று போனில் பேசிய நபர் தெரிவித்தார்.

இதையடுத்து வத்சலா தனியார் கிரெடிட் சொசைட்டியில் கடன் வாங்கி, நகைகளை அடகு வைத்து, மகளின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து, 10 நாட்களில் மொத்தம் ரூ.12 லட்சத்தை மோசடி செய்தவர்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைத்தார். அதன் பிறகும் அவர்கள் சொன்ன தொகை கிடைக்கவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வத்சலா இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *