Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: இந்திய அணியின் சீனியர் வீரரான ரோகித் சர்மா ஓய்வு பெற்றால், அடுத்த இலக்காக விராட் கோலி குறி வைக்கப்படுவார் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். விராட் கோலியின் அபாரமான ஃபார்ம் காரணமாக மட்டுமே இந்திய அணியில் அவரின் இடத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கூறியுள்ளார். இது ரசிகர்களிடையே விவாதமாகி இருக்கிறது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நாளை லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியுடன் ரோகித் சர்மா ஓய்வு பெற உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் திடீரென பிசிசிஐ தரப்பில் ரோகித் சர்மா நாளையுடன் ஓய்வு பெறப் போவதில்லை என்று விளக்கம் அளித்தது. இருப்பினும் ரோகித் சர்மாவின் ஓய்வு பேச்சுகள் பல்வேறு விவாதத்தை தொடங்கி வைத்திருக்கிறது.

இதுதொடர்பாக அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் பேசுகையில், இந்திய அணியில் யார் வேண்டுமானாலும் நீக்கப்படலாம். அதுதான் ஒரு கேப்டன், தேர்வுக் குழு மற்றும் பயிற்சியாளரின் வேலை. ஒருவர் நீக்கப்படும் போது, அவர் கேள்வி எழுப்ப முடியும். நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு தெளிவுபெற முடியும். ஆனால் வயது காரணமாக ஒருவர் நீக்கப்பட்டால் என்ன செய்வது?
இந்திய அணியில் வீரர்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையில் போதுமான பேச்சுவார்த்தைகள் நடப்பதில்லை.. ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் பெரியளவில் பணி நீக்கம் நடக்கும். சில நேரங்களில் சீனியர் லெவலி இருப்பவர்கள் கூட பணியில் இருந்து அனுப்பப்படுவார்கள். ஆனால் அங்கு ஏன் என்ற விளக்கம் அளிக்கப்படும். இந்திய அணிக்காக 20 ஆண்டுகளாக ஆடியுள்ள ஒருவரை, அனுப்ப பார்க்கிறார்கள்.
ஆனால் அவருடன் போதுமான பேச்சுவார்த்தை கூட நடக்கவில்லை. அவருக்கான மரியாதை கூட கொடுக்கப்படவில்லை. அதுதான் பிரச்சனையாக உள்ளது. இந்த விவகாரம் அப்படியே தொடர்ந்தால் அடுத்து விராட் கோலி தான். விராட் கோலி ஒவ்வொரு தொடரிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
விராட் கோலி மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கிறார். அவரை இவ்வளவு சிறந்த ஃபார்மில் பார்த்ததே இல்லை. நிச்சயமாக உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பார்க்க விரும்புகிறேன். ஆனால் விராட் கோலி மட்டும் கொஞ்சம் சொதப்பினால், அவ்வளவுதான். நிச்சயமாக அப்படி நடக்க கூடாது. விராட் கோலி ஃபார்ம் அவுட்டாக வாய்ப்பில்லை. அதேபோல் ரோகித் சர்மாவும் மோசமாக விளையாடவில்லை என்று தெரிவித்துள்ளார்.