உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அலிகஞ்ச் பகுதியில் கோச்சிங் சென்டர் ஒன்று செயல்பட்டு வந்தது. முதல் மாடியில் செயல்பட்டு வந்த அந்த கோச்சிங் சென்டரில் திடீரென தீப்பிடித்துக்கொண்டது. இதனால் மாணவர்கள் முதல் மாடியில் இருந்து கீழே குதித்தனர்.
தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைந்தனர். தீயில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகளை துணை முதல்வர் பிரிஜேஷ் பதக் நேரில் பார்வையிட்டார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில், ”தீ விபத்து திடீரென ஏற்பட்டது. குழந்தைகள் இங்கு அனிமேஷன் கற்க வருவது வழக்கம். தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து எனக்கு இன்னும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. காயமடைந்தவர்கள் கே.ஜி.எம்.சி அதிர்ச்சி சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்படுகிறார்கள்.

அவர்கள் சுமார் 16-17 வயதுடையவர்கள். இந்தச் சம்பவம் குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
தீவிபத்தில் இருந்து 12 பேர் மீட்கப்பட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
தீவிபத்தை நேரில் பார்த்த ஒருவர் இது குறித்து கூறுகையில், ”கட்டிடம் மூன்று மாடிகளைக் கொண்டது. மேல் மாடியில் தீப்பற்றிக்கொண்டது. அது படிப்படியாக கீழே உள்ள மாடிகளுக்குப் பரவியது. மாணவர்கள் உட்பட அதிகமானோர் தீவிபத்தில் சிக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது” என்று தெரிவித்தார்.
5 முதல் 7 மாணவர்கள் முதல் மாடியில் இருந்து கீழே குதித்ததாகவும், அதில் ஒருவர் காயம் அடைந்ததாகவும் மற்றொருவர் குறிப்பிட்டார்.
தீவிபத்து தொடர்பான காணொலி சமூக வலைத்தளப் பக்கத்தில் வைரலாகி இருக்கிறது. ஒரு காணொளியில், கட்டிடத்தின் உடைந்த ஜன்னல் வழியாக ஒரு நபர் வெளியே வர முயற்சி செய்கிறார். அவர் ஒரு விளிம்பைப் பிடித்துத் தொங்க முயற்சிக்கிறார். ஆனால் அவரால் பிடித்துக்கொள்ள முடியவில்லை.
ஒரு தடுப்பின் மீது மோதி பின்னர் தரையில் விழுகிறார். சிலர் அவரைப் பாதுகாப்பான இடத்திற்குக் தூக்கிச் சென்றனர். அவர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தீவிபத்தில் இறந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளதோடு அவர்களின் குடும்பத்திற்குத் தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.