“முன்னாடி எல்லாம் எங்க மழையூர்ல இருந்து மட்டுமே விநாயகர் சதுர்த்தி சீசனுக்கு 200 பிள்ளையாருக்கு மேல விற்பனைக்கு போகும். ஆனா இப்போ POP சிலைகளால எங்களோட வாடிக்கையாளர்கள் பாதியா குறைஞ்சுட்டாங்க.
எங்க ஊரைப் பொறுத்தவரைக்கும் பெரியவர்கள், பெண்கள் தவிர டிகிரி படித்த 15 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த தொழிலை செஞ்சுட்டு இருக்கோம். வருமானம் கம்மியா இருந்தாலும், விவசாய வேலை, மத்த வேலைகளையும் பார்த்துகிட்டு இந்த பாரம்பரிய தொழிலைக் காப்பாத்தணும்னு தொடர்ந்து செஞ்சுட்டு இருக்கோம்” என்கிறார் பாலமுருகன்.
“20 ஆண்டுகாலப் போராட்டம்… அரசுக்கு கோரிக்கை!” –
30 வயது இளைஞர் சக்திவேல் பேசுகையில்,
“மழைக்காலம் வந்தாலே களிமண் உலர்வதும் அரிதாகி, தொழிலை மேற்கொள்ள முடியாமல் மண்பாண்டக் கலைஞர்களின் வாழ்வாதாரம் முடங்கிப்போவது வழக்கமான ஒன்றாகிவிடுகிறது. தற்போதைய நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 454 குலாலர் குடும்பங்களுக்கு அரசு வாரியம் மூலமாக மழைக்கால நிவாரணத் தொகையாக ரூ.5,000 வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், மழையூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்களுக்கு இந்த நிதி சென்றடையாமல் விடுபட்டுப்போயுள்ளது. நலவாரியத்தில் பதிந்து பலமுறை மனுக்கள் அளித்தும், பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பலனளிக்காத நிலைதான் நீடிக்கிறது. “இது ஏதோ நேற்றோ இன்றோ எழுந்த பிரச்சனை இல்லை; கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் அரசிடம் முன்வைத்துவரும் நியாயமான கோரிக்கை!” எனக் குமுறுகிறார்கள் மழையூர் பகுதி உழைப்பாளிகள்.
இதனுடன் சேர்த்து, கையினால் மட்டுமே மண் எடுக்கும் தங்களுக்கு எந்தவித இடையூறுமின்றி ஏரி, குளங்களில் மண் எடுக்க நிரந்தர உரிமம் ( லைசன்ஸ்) வழங்க வேண்டும் என்றும், மழைக்காலத்தில் சிலைகளையும் பாண்டங்களையும் பாதுகாப்பாக உலர்த்த தொழில்கூட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்..” என்றும் அரசிடன் கோரிக்கை வைக்கிறார்.
நவீன வேலைவாய்ப்புகளும் தொழில்நுட்ப வளர்ச்சியும் நம்மை வேகமாகக் கடந்து செல்லும் இந்த நவீன யுகத்தில், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் போன்ற சூழல் கேடு விளைவிக்கும் செயற்கைப் பொருட்களின் ஆதிக்கத்தையும் தாண்டி, தன் பாரம்பரிய மண்ணையும் மரபையும் கைவிடாமல் காத்து நிற்கும் மழையூர் இளைஞர்களின் சுற்றுச்சூழல் நேசமும், தங்களின் வேர்களை மறக்காத ‘மண்’காதலும் உண்மையிலேயே போற்றப்பட வேண்டிய ஒன்று!