வடபழஞ்சி: `ஓர் உயிரிழப்புக்குப் பிறகும் தொடரும் பாதுகாப்பு குறைபாடு' – ரயில்வே கேட் அமைக்கப்படுமா?

Spread the love

மதுரை – போடிநாயக்கனூர் ரயில் பாதையில் அமைந்துள்ள வடபழஞ்சி ரயில்வே நிலையம், சிறிய நிலையமாக இருந்தாலும், அதைச் சுற்றியுள்ள கிராம மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கியப் பங்காற்றுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் தினமும் இந்த இருப்புப் பாதையைக் கடந்தே பயணிக்கின்றனர்.

ஆனால், பாதுகாப்பான ரயில்வே கேட் மற்றும் முறையான கடப்புப் பாதை இல்லாததால், ஒவ்வொரு நாளும் உயிரைப் பணயம் வைத்து தண்டவாளத்தைக் கடக்க வேண்டிய நிலை நீடித்து வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து மனுக்கள் அளித்து, போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். பல முறை கோரிக்கை வைக்கப்பட்டாலும், நிரந்தரத் தீர்வு இதுவரை கிடைக்கவில்லை.

இதற்கிடையில், 2025 நவம்பர் 30-ஆம் தேதி வடபழஞ்சி ரயில்வே கேட் அருகே ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களை உலுக்கியது.

அதைத் தொடர்ந்து, மக்கள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தைக் கடந்து செல்வது குறித்து பலமுறை ஊடகங்கள், பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. இருப்பினும், மக்களின் அடிப்படைப் பிரச்னை தீர்க்கப்படாமல் தொடர்கிறது.

சமீபத்திய தேர்தலின்போது, வடபழஞ்சி பகுதியில் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இருப்பினும், அந்த வாக்குறுதிகள் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. பாதுகாப்பான ரயில்வே கேட், நிரந்தர கடப்புப் பாதை உள்ளிட்ட வசதிகளை விரைந்து ஏற்படுத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இது குறித்து சமூக ஆர்வலர் பிரவீன் குமார் கூறுகையில், “வடபழஞ்சியில் மட்டுமல்ல, மதுரை முதல் போடிநாயக்கனூர் வரை ரயில் பாதையை ஒட்டியுள்ள பல கிராமங்களிலும் இதே பிரச்னை நீடிக்கிறது. வடபழஞ்சியில் முழுமையான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுவதோடு, மற்ற கிராமங்களிலும் ஆய்வு செய்து நிரந்தர பாதுகாப்பு வசதிகளை அரசு மற்றும் ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

வடபழஞ்சி மட்டுமல்ல, மதுரை – போடிநாயக்கனூர் ரயில் பாதையை ஒட்டியுள்ள பல கிராமங்களிலும் மக்கள் இதே ஆபத்தான சூழலில் வாழ்ந்து வருகின்றனர். பாதுகாப்பு வசதிகள் இல்லாததால், அன்றாடம் உயிரைப் பணயம் வைத்து தண்டவாளத்தைக் கடக்கும் நிலை தொடர்கிறது. ஒரு பகுதியில் மட்டும் தீர்வு காண்பதற்குப் பதிலாக, முழு ரயில் பாதையையும் ஆய்வு செய்து, பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தும் ஒருங்கிணைந்த திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *