India
oi-Vignesh Selvaraj
சென்னை: நார்வேயில் வாழும் மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரம், உலகின் மிகச் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. நார்வேயில் வசிக்கும் ஒரு இந்தியர், இந்தியாவிலும் நார்வேயிலும் வயதான பெற்றோர்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறார்கள் என்பது குறித்த ஒரு பதிவால் இதுகுறித்த விவாதத்தைத் தூண்டியுள்ளார்.
நார்வேயில் முதியவர்கள் தங்கள் பிள்ளைகளின் வருமானத்தையோ அல்லது அவர்களின் கவனிப்பையோ சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் தங்களின் முதுமைக் காலத்தில் தனித்து, சுய மரியாதையுடன் வாழ்வதை அங்குள்ள சமூகக் கட்டமைப்பு உறுதி செய்கிறது.

பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் கூடி மகிழ்வார்களே தவிர, அன்றாடத் தேவைகளுக்கு அவர்களைச் சார்ந்திருக்க மாட்டார்கள். இந்நிலையில், நார்வே நாட்டின் இந்த அமைப்பையும் இந்தியாவில் நிலவும் சூழலையும் ஒப்பிட்டு ஒருவர் விவாதத்தைக் கிளப்பியுள்ளார்.
எக்ஸ் சமூக வலைதளத்தில் வினோத் என்பவர் வெளியிட்ட ஒரு பதிவில், இந்தியா மற்றும் நார்வேயில் குடும்ப சூழலை ஒப்பிட்டுள்ளார். அவரது பதிவில், “நார்வேயில் வயதான பெற்றோர்கள் பொதுவாகத் தங்கள் பிள்ளைகளுடன் குடியேறுவதில்லை. மாறாக, அவர்கள் தங்கள் சொந்த வீடுகளில் தொடர்ந்து வசிக்கலாம் அல்லது பராமரிப்பு இல்லங்களுக்குச் செல்லலாம். அங்கு நர்ஸ்கள் அவர்களைக் கவனித்துக்கொள்வார்கள், உணவு மற்றும் செயல்பாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்படும், மேலும் அவர்களின் கண்ணியத்திற்கும் சுதந்திரத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
தனியாக வாழ்வதால் குடும்பங்களுக்குள் அந்நியமாகிவிடுமோ என்ற அவசியமில்லை. அவர்கள் வார இறுதி நாட்களில் தங்கள் பேரக் குழந்தைகளைச் சந்திக்கிறார்கள். அவர்கள் குடும்பத்தினரை சந்தித்துக் கொள்கிறார்கள். அவர்கள் ஒன்றாக ஹாலிடே ட்ரிப்களுக்குச் செல்கிறார்கள். பெற்றோரைத் தங்கள் பிள்ளைகளைச் சார்ந்திருக்க வைக்காமல், அவர்கள் ஒருவருக்கொருவர் இணைந்திருக்கிறார்கள்.”
நார்வேயில் உள்ள குடும்ப அமைப்பு, அவர்களின் மகன் எவ்வளவு சம்பாதிக்கிறார், மகள் எவ்வளவு அன்பு காட்டுகிறாள், அல்லது மருமகள் எவ்வளவு கருணையுள்ளவள் என்பதைச் சார்ந்திருக்காத வகையில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது” என்று வினோத் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதை இந்தியாவுடன் ஒப்பிட்டு, “இந்தியாவில், உங்கள் வயதான பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்தால், மொத்த தெருவே அதைப்பற்றிப் பேசும்.
வேலைகள், வீட்டுக் கடன் இ.எம்.ஐ, குழந்தைகளின் பள்ளிக் கட்டணம், வயதான பெற்றோரின் மருத்துவச் செலவுகள் என இந்தியக் குடும்பங்கள் ஒரே நேரத்தில் பல பொறுப்புகளைச் சமாளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம். சில வயதான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சுமையாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக, தங்கள் தேவைகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசாமல் இருக்கலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியர்கள் தங்கள் பெற்றோரை நேசிப்பதில்லை என்று அல்ல. நார்வே நாட்டினரும் தங்கள் பெற்றோரை நேசிக்கிறார்கள். ஆனால் நாம் அன்பை, கடமை, பணம் மற்றும் குற்றவுணர்ச்சியுடன் கலந்துவிடுகிறோம். வயதான பெற்றோர்கள், பிறரைச் சார்ந்திருப்பதாகவோ, குற்றவுணர்ச்சி கொண்டதாகவோ அல்லது ஒரு சுமையாகவோ உணராமல், சுதந்திரமாக முதுமை அடைய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவு எக்ஸ் தளத்தில் கலவையான எதிர்வினைகளை எதிர்கொண்டுள்ளது. “நீங்கள் இங்குள்ள மிக முக்கியமான விஷயத்தைத் தவறவிடுகிறீர்கள். முதுமையில், நீங்கள் இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்த இடத்தில்தான் வசதியாக உணர்கிறீர்கள்.” என நெட்டிசன் ஒருவர் தெரிவித்துள்ளார். மற்றொருவர், “ஆமாம் உண்மை.. பெற்றோர்கள் தற்சார்புடன் செயல்படும் வகையில் அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.