வரலாறே வாய் பிளக்கும்! – பச்சோந்தி அரசியலுக்குச் சாட்டை அடி கொடுப்பார்களா மக்கள்?

Spread the love

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

கழுகு தன் சிறகுகளை அடித்து ‘வார்ம் அப்’ செய்த பிறகு பறக்க முயற்சிப்பதைப் போல், வரலாறு தன் வெற்றுப் பக்கங்களைத் திறந்து வைத்தபடி புதிய அரும்பெரும் செயல்களைத் தன்னகத்தே பதிவு செய்வதற்காகக் காத்துக் கிடக்கிறது!வரலாற்றில் தடம் பதிப்பது எளிமை இல்லை என்றாலும், இயற்கை சில சமயங்களில் அதனை எளிதாக்கிக் கொடுப்பதும் உண்டு.

தேர்தல்
தேர்தல்

தமிழக அரசியல் வரலாற்றில் அப்படி ஓர் அரிய சந்தர்ப்பத்தை இயற்கை தேர்தல் வடிவில் இரண்டு தொகுதி மக்களுக்கெனக் கொண்டு வந்து கொடுத்துள்ளது. அத் தொகுதி மக்களின் சரியான அணுகுமுறையே இந்திய நாட்டு மக்களுக்கே இலக்கணமாக விளங்கப் போகிறது.

‘மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி’என்பதுதான் ஜனநாயகத்தின் வரையறை.

இந்த ஆட்சியில் மக்களே மன்னவர்கள்.அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் அவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டிய பொதுச் சேவகர்களே!

ஆனால் நமது அரசியல்வாதிகள் விதிகளை ரிவர்சாக்கி, தங்களைச் சக்கரவர்த்திகள் ஆக்கிக் கொண்டு விட்டார்கள்.ஒரு காலத்தில் முட்படுக்கையால் நிரப்பப்பட்டிருந்த ஆட்சிக் கட்டில்களை,ரோஜா இதழ்கள் கொண்ட கட்டிலாகத் தங்கள் வசதிக்காக மாற்றிக் கொண்டு விட்டார்கள்.அப்பாவிப் பொது ஜனங்களும் அவர்கள் ஆசை வார்த்தைகளில் மயங்கி தங்களைச் சாதாரண குடிகளாக ஆக்கிக் கொண்டு விட்டார்கள்.’ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கொறைச்சலில்லே!இருக்கிறது இலவசமும் இனிய டாஸ்மாக்கும்!’என்றே பெரும் பாலானவர்கள் இன்று வாழ்கிறார்கள்.

தமிழ்நாடு தேர்தல்
தமிழ்நாடு தேர்தல்

இன்றைய நடைமுறை வாழ்வில்,அடிக்கடி தேர்தல் வருவதையும்,அதன் மூலம் கிடைக்கும் சொற்பக் காசையும் எதிர்பார்த்தே பெரும்பாலான மக்கள் காலந்தள்ள

ஆரம்பித்து விட்டார்கள்.தேர்தலில் நிற்பவர்களோ முதலில் காசைக் கொடுத்து ஓட்டு வாங்கி வெற்றி பெறுகிறார்கள். அப்புறம் பெரும் தொகைக்கு,கொடுத்த காசைப் போல பல மடங்கு பெற்றுக்கொண்டு, கட்சி மாறி விடுகிறார்கள்.கட்சியின் கொள்கைகள்,தங்களுக்காக உழைத்த தொண்டர்கள்,தங்களை நம்பி வாக்களித்த பொது ஜனங்கள் ஆகிய எவரின் உணர்ச்சிகளையும் மதிக்காமல்,தங்கள் சொந்த உயர்வு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவோரை எந்த லிஸ்டில் சேர்ப்பது?ஒவ்வொரு தேர்தல் நடத்தவும்,அரசுப்பணமும்,பலரின் உழைப்பும் எவ்வளவு செலவழிக்கப்படுகிறது.

அதனை வீணடிப்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?அந்தப் பணத்தில் முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்தலாம் அல்லவா?

இது ஒன்றிரண்டோடு நின்றிருந்தால்,விதி விலக்கு என்று விட்டு விடலாம். ஆனால் இதனையே எல்லோரும் செய்கின்ற பொழுது,தேர்தல் ஆணையமும்,நீதி மன்றங்களும் கூட, ஏற்றுக் கொள்ளவே முடியாத இதில் தலையிடாமல் தப்பித்துக் கொள்ளும்போது,மக்களாகிய நம் வசம் இருக்கும் அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி நாமே இதற்கொரு முடிவு கட்டுவதே முறையாக இருக்கும்.

நல்லவர்களை,நாட்டு மக்களுக்காக உழைப்பவர்களை,சுய நலத்திற்கும் சொந்தக் குடும்பத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்காதவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியவர்கள், நேர் எதிர் மாறானவர்களை வெற்றி பெறச் செய்வதே இன்றைய உலகின் எதார்த்தமாகப் போனதுதான் வேதனை!உலகத்தில் வாழ்வாங்கு வாழ வழி சொல்லும் திருக்குறளும், நாலடியாரும், கீதையும்,இதிகாசங்களும் பிறவும் நமது இந்திய நாட்டைப் பெரும் உயரத்தில் கொண்டு வைத்துள்ளன. உலகினர் அவற்றை உயர்வாக மதித்துப் பின்பற்றுகையில் நாம் மட்டும் கோட்டை விட்டு விடுகிறோம்.

மாநில தேர்தல் ஆணையம்

அரசியலிலிருந்து முழுதாக ஒதுங்க நினைத்தாலும்,சில நிகழ்வுகள் அவ்வாறு செய்வததைத் தடுத்து விடுகின்றன.’வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்!’என்ற முண்டாசுக் கவிஞனின் ஆசையே நமது குறிக்கோளும் என்றாலும், நடக்கின்ற சிலவற்றை விமர்சிக்காமல் இருக்க முடியவில்லை.

வெற்றிக் கொண்டாட்டங்களின் ஈரம் காய்வதற்கு முன்பாகவே,எந்தக் கட்சியையும்,கொள்கையையும் பேசி ஓட்டுக்கேட்டார்களோ,நாமும் போட்டோமோ! அதனை அப்படியே மறந்து விட்டு எதிர்க் கட்சிக்குத் தாவுவது என்பது ஏற்புடையதல்லவே!வரைமுறைகளை மதிக்காமல்,வாக்களித்தவர்களை மதிக்காமல்,மரபுகளைத் தூக்கியெறிந்து விட்டு கட்சி மாறுவதென்பது கள்ளத்தனம் மிக்க கண்ணியமற்ற செயல் அல்லவா?

-வெற்றி பெறுவார்களாம்!

-சட்டசபை செல்வார்களாம்!

-பதவிக்காக ராஜினாமா செய்வார்களாம்!

-கட்சி மாறுவார்களாம்!

-மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவார்களாம்!

மக்களென்ன மந்தை ஆடுகளா?இந்த அவலத்தை உடைக்கும் சக்தி அவர்கள் ஆட்காட்டி விரலில் இருப்பதை அறியாத பேதைகளுக்குச் சரியான பாடம் கற்பிக்கும் உயர்ந்த இடத்தில் உள்ளவர்களல்லவா அவர்கள்! இன்று இது!

நாளை வேறொன்று என்று அவர்கள் ஓடுவதற்கு மக்கள் ஏன் இடங் கொடுக்க வேண்டும்?

எக்கோணத்திலிருந்து பார்த்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு கோணத்தில் அல்லவா அவர்கள் நிற்கிறார்கள். பணத்திற்காகவும்,பதவிக்காகவும் எதையும் விட்டுக்கொடுக்கத் துணிந்த இவர்களா மக்களுக்கு நன்மை செய்பவர்கள்?கொள்கைப் பிடிப்பும்,குறைவான மரபும் கொண்ட இவர்கள் அரசியல் செய்ய அருகதை அற்றவர்கள் அல்லவா?

உள்ளாட்சித் தேர்தல் | Gemini

இனம், சாதி, கட்சி என்றவற்றைத் தாண்டி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி மக்கள் வரலாற்றை வாய் பிளக்கச் செய்ய வேண்டும்.இது போன்றவர்களுக்கு ஏற்படும் தோல்வி,இந்திய அரசியல்வாதிகளுக்கே ஒரு படிப்பினையாக அமைய வேண்டும்.

டெபாசிட் கூடக் கிடைக்காத அளவுக்கு அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்.

புதிய கட்சிகள் வருவதில் மகிழ்ச்சியே.ஆனால் அவை வரலாற்றுப் பிழைகளுக்கு வழி வகுப்பது கூடாது. நெறி முறைகளைப் பின்பற்றியே எதுவும் வளர வேண்டும்.

அப்படி வளர்ந்தால்தான் அது நிலைக்கும்.

நமது அரசியல் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்.அரசியல்வாதிகள் அதனைச் செய்ய மாட்டார்கள்.நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள,பச்சோந்தி அரசியல்வாதிகளைப் பாரினில் அடையாளம் கண்டு நீக்க,இது ஓர் அற்புத தருணம்!

பயன்படுத்திக் கொண்டால் பலன் பெறலாம்.நல்லதே நடக்குமென்று நம்புவோம்!

“நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த

நிலைகெட்ட மாந்தரை நினைந்து விட்டால்!…

-ரெ.ஆத்மநாதன்,

புளோரிடா

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *