வறுமையில் விழவிருக்கும் 25 லட்சம் இந்தியர்கள், ஐ.நா எச்சரிக்கை… என்ன செய்யப்போகிறது அரசு?

Spread the love

ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை, இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தும் போர் ஏழு வாரங்களைக் கடந்திருக்கும் நிலையில், இன்னும் தொடர்ந்து நீடித்தால் உலகம் முழுவதும் 8.8 மில்லியன் மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள்; இந்தியாவில் 2.5 மில்லியன் மக்கள் ஏழைகளாவார்கள் என்று கூறியுள்ளது அவ்வறிக்கை.

போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதன் விளைவாக தொடர் கச்சா எண்ணெய் விலை உயர்வு, சரக்கு கப்பல்களுக்கான கட்டணங்கள் உயர்வு, உரப் பற்றாக்குறை, அந்நியச் செலாவணி இழப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளை உலக நாடுகள் சந்தித்துவருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, கச்சா எண்ணெய், எரிவாயு, விவசாயத்துக்குத் தேவையான உரப் பொருள்கள் என, இறக்குமதியையே நம்பியுள்ளது. எனவேதான், போரின் விளைவு அனைத்துப் பொருள்களின் விலைகளிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

‘இந்நிலை தொடர்ந்தால் இந்தியாவில் 25 லட்சம் பேர் வறுமையில் தள்ளப் படுவார்கள். விலைவாசி ஏற்றம், உணவுத் தட்டுப்பாடு, பஞ்சம் எனத் தலைவிரித்தாடும்’ என்று எச்சரிக்கிறது ஐ.நா. இந்தியாவில் தற்போது 23.9% ஆக இருக்கும் வறுமை விகிதம் 24.2% ஆக உயரும்; மனித வளர்ச்சிக் குறியீட்டில் (Human Development Index) 0.03 – 0.12 வரை பின்னடைவு ஏற்படும் என்று கணிக்கப் படுகிறது. ஆனால், இந்திய அரசு இது குறித்து எந்தவித ஆய்வோ, ஆலோசனையோ இதுவரை நடத்தவில்லை. பல போர்கள், நெருக்கடிகளைப் பார்த்த பிறகும் எந்தவித படிப்பினைகளையும் பெறவில்லை. இப்போதும், அரசு சூழலை எதிர்கொள்ளத் தயாராவதற்கு முன்னரே பல லட்சக்கணக்கானோர் வேலை இழப்பு, ஊதியக் குறைவு, பட்டினி என மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார்கள் என்பதே நிலை.

ஐ.நா எச்சரிக்கையைத் தொடர்ந்து, இந்திய அரசு துணிச்சலுடன், வெளிப்படையாக, அவசரமாகச் செயல்பட வேண்டிய நேரம் இது. இறக்குமதி சார்பைக் குறைக்க உடனடியாகத் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். எங்கெல்லாம், எதிலெல்லாம் பற்றாக்குறை, நெருக்கடி ஏற்படுமோ அதைச் சமாளிக்கும் வழிகளை ஆராய வேண்டும். விலைவாசி உயர்வினால் மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். தொழில், வேலைவாய்ப்பு என மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படாத வகையில் கொள்கைகளையும், நலத்திட்டங்களையும், ஊக்குவிப்புத் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும். உணவுப் பாதுகாப்புக் கொள்கை மூலம் பஞ்சம், பட்டினி உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அரசு இப்போதும் தன் பொறுப்புகளில் இருந்து தவறினால், எங்கோ நடக்கும் போரின் நெருப்பில் லட்சக்கணக்கான இந்தியர்களின் வயிறு தகிக்கவிருப்பதைத் தடுக்க முடியாமல் போய்விடும்.

– ஆசிரியர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *