Tamilnadu
oi-Vishnupriya R
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே கடந்த 6 நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத இரண்டு சிறுவர்கள் விவசாயி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் பெற்ற தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் உட்பட இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம், பெத்தூர் பகுதியில் கடந்த மாதம் 30-ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் பிரகாசம் என்பவர் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை இயக்கி விட்டு கிணற்றை எட்டிப் பார்த்துள்ளார்.

அப்போது கிணற்றுக்குள் இரண்டு சடலங்கள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து மின் மோட்டாரை நிறுத்திவிட்டு ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
தகவலின் பெயரில் விரைந்து வந்த ஆலங்காயம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் அழகிய நிலையில் இருந்த இரண்டு சிறுவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு கிணற்றில் இறந்து கிடந்த சிறுவர்கள் யார் ?
எந்த ஊர் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் கடந்த ஆறு நாட்களாக குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் இறந்த சிறுவர்கள் ஜமுனாமத்தூர், வெளிச்சானூர் பகுதியை சேர்ந்த சேட்டு-சிவகாமியின் தம்பதியினரின் 5 வயது மகன் பிரதாப் மற்றும் 2 வயது மகன் பிரேம்குமார் என்பது தெரியவந்தது.

இரு சிறுவர்களை பெற்ற தாயே அவருடைய கள்ளக்காதலுனுடன் சேர்ந்து கிணற்றில் தூக்கி வீசி கொலை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சிறுவர்களின் தாயான சிவகாமி மற்றும் ஜமுனாமத்தூர் வெளிச்சானூர் பகுதியை சேர்ந்த அவரது கள்ளக்காதலன் ராஜா ஆகிய இருவரையும் கைது செய்த தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் சிவகாமி தனது கணவர் சேட்டுவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒரு வருட காலமாக பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் இதற்கிடையில் சேட்டு செம்மர கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதாக கூறப்படும் நிலையில் தனிமையில் இருந்த சிவகாமிக்கு ராஜாவுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாம். அவ்வப்போது தனிமையில் சந்திக்கும் இருவரும் குடும்பம் நடத்தி வந்தனராம். இதனால் சிவகாமி மீண்டும் கர்ப்பம் ஆனதாக கூறப்படுகிறது.

மேலும் ராஜா, நமக்குதான் குழந்தை பிறக்க போகிறதே உனக்கு, எதுக்கு இந்த இரு மகன்கள்” என கேட்டாராம் இதனால் சிவகாமி, இரண்டு குழந்தைகளையும் ஆலங்காயம் பகுதிக்கு அழைத்து வந்து மறைவாக உள்ள விவசாய கிணற்றில் இரண்டும் குழந்தைகளையும் அடுத்தடுத்து தள்ளி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து இருவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற தாயை இரண்டு மகன்களை கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது
