தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்ற சூழலில் அக்கட்சியின் ஊடகப் பிரிவு முதன்மை செயலாளர் பனையூர் பாபு விலக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுகுறித்து விரிவாக விசாரித்தோம்

வி.சி.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு, எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோருக்கு சீட் கொடுக்காத திருமா, பொதுச்செயலாளர் சிந்தனை செல்வனை செய்யூருக்குத் தூக்கியடித்தார். இதனால் சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள், பொதுச்செயலாளர்கள் எனப் பலருக்கும் தலைமைமீது ஏக வருத்தம் இருந்தது. ‘தேர்தல் முடிந்த பிறகு எல்லாம் சரியாகிவிடும்’ எனச் சொல்லப்பட்டுவந்த நிலையில், பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கவே செய்தன. இச்சூழலில் ‘சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் மூவர் அப்செட்டாக இருக்கிறார்கள்’ என ஊரே பேசும்போது, இருவருக்கு மட்டும் பொறுப்பு வழங்கியது பாபு தரப்பைக் கொந்தளிக்க வைத்துவிட்டது. ஆகவே, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பெரும்படையோடு அவர் கட்சியிலிருந்து விலகலாம் என முன்பே பேசப்படுகிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், “கடந்த ஆறு மாதங்களாக செய்யூர் தொகுதியை தயார் செய்து வைத்திருந்தார் பனையூர் பாபு. எந்த ஆலோசனையுமின்றி செய்யூர் தொகுதியை சிந்தனைச் செல்வனுக்கு கொடுத்துவிட்டார். இதனால் கடும் அப்செட்டான பாபு, வி.சி.க-விலிருந்து ஒதுங்கியிருந்தார். சீட் கிடைக்காத விரக்தி, கட்சியில் முக்கியத்துவம் இல்லை உள்ளிட்ட காரணங்களுடன் அவர் விலகலாம் என கிசுகிசுக்கப்பட்டன. இந்த சூழலில், விஜய் அமைச்சரவையில் வி.சி.க பங்கேற்றதையும் பனையூர் பாபு துளியும் விரும்பாத நிலையில் மே 24-ம் தேதி மாலை அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகலாம்” என்றனர்.

நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள் “வி.சி.க-வின் அதிகாரப்பூர்வ ஊடகமான வெளிச்சம் தொலைக்காட்சி பனையூர் பாபு மேற்பார்வையில்தான் செயல்படுவதாக தெரிகிறது, பாபு வெளியேறுவதாக இருந்தால் தொலைக்காட்சி யாரிடமிருக்கும் என்ற சர்ச்சை வி.சி.க-வுக்குள் வெடித்திருக்கிறது. மேலும் பனையூர் பாபு தனியாக செல்கிறாரா… பெரும் படையுடன் செல்கிறாரா.. என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றனர்.