விஜய் ஆட்சிக்கு செக்? ஆக்‌ஷனில் இறங்கும் ஆளுநர்..! – Kumudam

Spread the love

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது குதிரை பேரக் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வரும் நிலையில், அண்மையில் இதுதொடர்பாக அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் ஆளுநரிடம் புகார் அளித்திருந்தனர். 

அதிமுகவின் 6 சட்டமன்ற உறுப்பினர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், மரகதம் குமரவேல், எஸ்.ஜெயகுமார், பி.சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோரிடம் குதிரை பேரம் நடத்தி தங்களின் பதவிகளையும் ராஜினாமா செய்ய வைத்து தமிழக வெற்றி கழக அரசு தம்முள் வளைத்துக் கொண்டது அதிமுக தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.   திமுகவை பொறுத்தவரை தவெக அரசு, பிற கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகச் சொல்லி பண பலம் மற்றும் தேர்தல் ஆதரவு தருவதாகக் கூறி குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

டெல்லி பயணம் மேற்கொண்டு மத்திய உள்துறை அமைச்சகத்தின் சட்ட வல்லுநர்களுடன் விரிவான ஆலோசனைகளை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ள ஆளுநர் அர்லேகர் விரைவில் தவெகவின் குதிரை பேரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்று தெரிகிறது.

அதெப்படி முருகேசா எந்த கட்சியில் ராஜினாமா செய்தாலும், அவர்கள் தவெகவிற்கே படையெடுக்கின்றனர்? என்று வடிவேலு பாணியில் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் கேள்விக் கேட்கும் நிலையில், தவெக கூட்டணியில் புதிதாக இணைந்த மதிமுகவும் சில விஷயங்களை உறுதிப்படுத்தியுள்ளது என்கின்றனர் அரசியல் விவரம் அறிந்தவர்கள். 

அதாவது, தவெகவுடன் கூட்டணியில் இணைய தங்களுடைய இரண்டு எம்.எல்.ஏக்களையும் ராஜினாமா செய்துவிட்டு முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் கண்டிஷன் போட்டதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவே கூறியிருந்தார். இதனால், தவெக குதிரை பேரத்தில் ஈடுப்பட்டுள்ளது என்பது ஊர்ஜிதமாகியுள்ளதாகவும், இதனால் தவெக மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.  

இந்நிலையில், அண்மையில் டெல்லிக்குச் சென்று வந்த ஆளுநர், விஜய் அரசு மீதான குதிரை பேர புகார்களை எப்படி விசாரிப்பது? அதன்மீது அடுத்தக்கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது? போன்ற ஆலோசனைகளை டெல்லி மேலிடத்துடன் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனைத் தொடர்ந்து, தவெக அரசுக்கு தக்க பதிலடியாக தற்போது தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அதிரடி நடிவடிக்கை ஒன்றை எடுக்க உள்ளதாக ராஜ்பவன் வட்டாரங்கள் கூறுகின்றன. அதாவது, சட்டப்பிரிவு 167ன் படி, மாநிலத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழல் மற்றும் ஆட்சி நிர்வாகம் குறித்து முதலமைச்சருக்கு உத்தரவிட்டுத் தகவல்களைப் பெறும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு என்பதால், இதனை பயன்படுத்தி கொண்டு எதிர்கட்சிகளின் எம்எல்ஏக்கள் தொடர் ராஜினாமா மற்றும் கட்சி தாவல் இதற்கெல்லாம் பின்னணி என்ன? இதற்கு பின்னால் செயல்படுவது யார்? இதில் ஏதேனும் அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளதா? என்று சரமாரியான கேள்விகளுடன் ஆளுநர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் தான் இடைத்தேர்தல் குறித்தான எந்தவித அறிவிப்பும் வெளியாகாமல் இருப்பதாக ஒருப்பக்கம் கூறப்படுகிறது.  மறுபக்கம், இந்த இடைத்தேர்தல் அறிவிக்கப்படாததற்கு இன்னும் தவெகவிற்கு தேவையான ராஜினாமாக்கள் கிடைக்கவில்லை, அதனால் தான் தவெக பாஜக ஆதரவுடன் தேர்தல் ஆணையம் மூலம் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகாமல் வைத்துள்ளது என்று திமுக குற்றஞ்சாட்டுகின்றது. 

எனவே, ஆளுநர் யார் பக்கம் முடிவு எடுக்கப்போகிறார்? தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *