'விஜய் கொடும்பாவி எரிப்பு, காத்திருந்த உதயநிதி, தாக்கப்பட்ட பத்திரிகையாளர்கள்' – தஞ்சையில் பரபர

Spread the love

உதயநிதி ஸ்டாலின் தலைமையில், விவசாயிகள் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரியும், மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுக்காத தவெக அரசைக் கண்டித்தும் தஞ்சாவூரில் கடந்த 3ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் உதயநிதி இரட்டை அர்த்தத்தில் பேசியதாகச் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் உதயநிதி மீது பெண்களை இழிவுப்படுத்துதல் உட்பட 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து தஞ்சாவூரில் இருந்து சென்ற போலீஸ் டீம் சென்னையில் உதயநிதியைக் கைது செய்து அழைத்து வந்தனர்.

காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின்
காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின்

ஒவ்வொரு மாவட்டத்தைக் கடந்து வரும் போதும் குவிந்திருந்த திமுகவினரைச் சமாளிப்பது போலீஸாருக்குச் சவாலாக இருந்தது. சில இடங்களில் போலீஸார் மீது கல்வீசியதாகவும் சொல்கிறார்கள். உதயநிதி கைதைக் கண்டித்து தஞ்சாவூர் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திமுகவினர் போராட்டம் நடத்தினர்.

குறிப்பாக தஞ்சாவூரில் கலைஞர் அறிவாலயத்தில் திரண்டிருந்த திமுக-வினர் ஊர்வலமாகச் சென்று ரயிலடியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

பின்னர் பழைய பேருந்து நிலையம் சென்றவர்கள் அண்ணா சிலை ரவுண்டானாவில் வைக்கப்பட்டிருந்த தவெக கொடிகளைச் சேதப்படுத்தினர். இதையறிந்த தவெக-வினர் அங்கு குவிய இருதரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் உண்டானது. இருதரப்பும் மாறி, மாறி கற்கள், செருப்புகள் வீசிக்கொண்டனர். அசம்பாவிதம் ஏற்படாமல் தடுப்பதற்குள் போலீஸார் திண்டாடி விட்டனர். திமுக-வினர் சில இடங்களில் கடைகளை மூடச் சொல்லி அழுத்தம் கொடுத்த வணிகர்கள் கடைகளை மூடினர்.

திமுக-வினர் ஆர்ப்பாட்டம்
திமுக-வினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்திற்கு உதயநிதியைக் கொண்டு வருவதற்கு போலீஸார் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காகப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திமுக-வினர் பெருமளவில் திரண்டிருந்தனர். உதயநிதி வருவதற்குச் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு முதல்வர் விஜய் கொடும்பாவி எரித்தனர்.

டி.ஐ.ஜி, எஸ்பி உள்ளிட்டோர் காவல் நிலையத்திற்கு வந்த போது கோஷமிட்டனர். நிலைமை சரியில்லாததை உணர்ந்த போலீஸார் உதயநிதியை செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்ல முடிவு செய்தனர்.

தெற்கு காவல் நிலையம் அருகில் திமுக நிர்வாகிகளான பழநிமாணிக்கம், வைத்திலிங்கம், துரை.சந்திரசேகரன், சண்.இராமநாதன் மற்றும் வழக்கறிஞர்கள் குழு உள்ளிட்ட பலர் காத்திருந்தனர். பின்னர் உதயநிதி செங்கிப்பட்டி காவல நிலையம் வருவதாக தகவல் சொல்லப்பட அங்கு சென்றனர்.

கிட்டத்தட்ட 8 மணி நேர பயணத்திற்குப் பிறகு போலீஸார் உதயநிதியை செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். வழக்கறிஞர்கள் குழு உள்ளிட்டவர்கள் வந்து சேரும் வகையில் சுமார் 40 நிமிடம் வரை உதயநிதி வேனிலேயே காத்திருந்தார்.

தவெக-வினர் ஆர்ப்பாட்டம்
தவெக-வினர் ஆர்ப்பாட்டம்

பின்னர் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை நடந்தது. அப்போது இரட்டை அர்த்தத்தில் பேசியது குறித்து கேள்வி கேட்டதற்கு, தனிநபர் குறித்து நான் பேசவில்லை, டபுள் மீனிங்கில் பேசவில்லை என்றுள்ளார். இதையொட்டி முக்கியமாக 5 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. எல்லாவற்றிற்கும் ஒரு சில வார்த்தைகளில் உதயநிதி பதில் சொல்லியிருக்கிறார். மேலும், ஆர்ப்பாட்டத்திற்குக் கொடுக்கப்பட்ட விதிமுறைகள் மீறப்பட்டது குறித்தும் கேட்டதாகத் தெரிகிறது.

உள்ளே உதயநிதி இருக்க வெளியே நல்ல மழை பெய்தது. அதைப் பொருட்படுத்தாமல் திமுக-வினர் காத்திருந்தனர். ஸ்டேஷன் முன்பு பத்திரிகையாளர்கள் குவிந்திருந்தனர். இதில் பல பத்திரிகையாளர்களை மது போதையிலிருந்த சில திமுக-வினர் தாக்கியுள்ளனர். குறிப்பாக நியூஸ் தமிழ் சேனலைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோரைத் தாக்கியுள்ளனர். இது குறித்து இரண்டு சேனலைச் சேர்ந்த ஊழியர்கள் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின்

ஸ்டேஷனுக்குள் இருந்த உதயநிதிக்கு இளைஞரணியைச் சேர்ந்த மதன்குமார், பையில் எடுத்து சென்று ஸ்நாக்ஸ் கொடுத்தார். அதிலிருந்த பிரெஞ்ச் பிரைஸ், சாண்ட் விஜ், முந்திரியை உதயநிதி சாப்பிட்டார். சுமார் இரண்டு மணி நேரம் உதயநிதி ஸ்டேஷனுக்குள் இருந்தார். விசாரணை அரை மணி நேரத்தில் முடிந்து விட மற்ற பார்மாலிட்டீஸ்க்காகக் காக்க வைக்கப்பட்டார். அப்போது திமுக நிர்வாகிகள், உதயநிதி, வழக்கறிஞர்கள் டீம் ஆகியோர் சகஜமாகப் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். விசாரணை முடிந்து போலீஸ் ஜாமினீல் வெளியே வந்த உதயநிதிக்கு திமுக-வினர் மாலை அணிவித்தனர். பின்னர் காரில் ஏறி திரண்டிருந்த திமுக-வினரைப் பார்த்து கையசைத்து விட்டு புறப்பட்டுச் சென்றார்.

தோல்விக்குப் பிறகு சுணங்கி போயிருந்தோம், இந்தக் கைது எங்களை உசுப்பி களத்துக்குக் கொண்டு வந்து விட்டது என திமுக-வினரும், யார் தப்பு செய்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டார் எங்கள் முதல்வர் விஜய் என தவெக-வினரும் பேசி வருகின்றனர்.

இதில் காவல் துறையினர்தான் பெரும் பாடுபட்டு விட்டார்கள். தஞ்சாவூரில் போதிய போலீஸ் ஸ்டென்த் இல்லை. இப்படியான சூழலில் பெரும் பரபரப்புக்கு மத்தியில் பெரிய அசம்பாவிதம் நடக்காமல் சமாளித்துள்ளனர் என்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *