விடிய விடிய விஸ்வரூபம் எடுத்த மாணவர் போராட்டம்.. தடியடி, கண்ணீர் புகை.. நள்ளிரவில் திணறிய போலீஸ்! | Jharkhand Student Protest: Hemant Soren Responds After Police Action Near Assembly, What happened

Spread the love

India

oi-Vigneshkumar

ராஞ்சி: டெல்லியை தொடர்ந்து இப்போது ஜார்க்கண்ட்டிலும் நீட் போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. நேற்றைய தினம் அம்மாநில சட்டசபையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட நிலையில், அவர்களுக்கு எதிராக போலீசார் தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தனர். இது தேசியளவில் பேசுபொருளான சூழலில், அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் இது குறித்து விளக்கமளித்தார்.

சட்டசபை முற்றுகைப் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய நடவடிக்கையைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் பேசியுள்ளார். மாணவர்களின் கோரிக்கைகள் தங்களது கவனத்துக்கு வந்துள்ளதாகவும், அவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவத்துடனும் உணர்வுப்பூர்வமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Jharkhand India protest

ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்

ஜார்க்கண்டில் அரசு பணியாளர் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திங்கள்கிழமை அம்மாநில சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சட்டசபையை நோக்கி சென்ற இளைஞர்கள் பல்வேறு தடுப்புகளை தாண்டி வேகமாக முன்னேறினர். ஒரு கட்டத்தில் சிலர் சட்டசபை வளாகத்திற்குள்ளும் நுழைந்தனர். இதையடுத்து போலீசார் தண்ணீர் பீரங்கிகள், கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதில் சில மாணவர்கள் காயமடைந்ததாக கூறப்பட்டது.

ஹேமந்த் சோரன்

இந்த சம்பவத்துக்கு பிறகு ஹேமந்த் சோரன் தனது ட்விட்டர் மூலம் மாணவர்களிடையே உரையாற்றினார். மாணவர்கள் தங்களது கோரிக்கைகளை அமைதியான முறையில் முன்வைத்ததாகவும், ஜனநாயகத்தில் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த அவர்களுக்கு முழு உரிமை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மாணவர்களின் குரலுக்கு மதிப்பளிப்பது அரசின் பொறுப்பு என்றும் சோரன் கூறினார். மாணவர்களுடன் மூத்த அமைச்சர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அவர்களின் கோரிக்கைகள் மீது மிகுந்த கவனத்துடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மாணவர்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளாத வகையில், மாநிலத்தின் தேர்வு முறையில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சோரன் தெரிவித்தார். தேர்வு முறையை மேலும் வெளிப்படையானதாகவும், தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டதாகவும் மாற்ற அரசு விரும்புவதாக அவர் கூறினார். இந்த மாற்றங்களை கொண்டு வருவதில் மாணவர்களும் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்றும் முதல்வர் ஹேமந்த் சோரன் குறிப்பிட்டார்.

மாணவர்கள் எதிர்காலம்

அதேநேரம் மாணவர்களின் போராட்டத்தை எதிர்க்கட்சியினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயல்வதாக ஹேமந்த் சோரன் குற்றம்சாட்டினார். அவர்கள் போராட்டத்தை திசைதிருப்பவும், மாணவர்களை தவறாக வழிநடத்தவும் முயல்வதாக கூறிய அவர், இதில் மாணவர்கள் சிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். அவர் மேலும், “மாணவர்கள் ஜார்க்கண்டின் எதிர்காலம். அவர்களின் கவலைகளை கேட்பது அரசின் பொறுப்பு. இந்தப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மற்றும் நம்பிக்கையின் மூலம் ஒன்றாகத் தீர்ப்போம்” என்றும் சோரன் தெரிவித்துள்ளார்.

போலீசார் நடத்திய நடவடிக்கையில் பல போராட்டக்காரர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியானது. மேலும், தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர் தலைவர் தேவேந்திர நாத் மஹ்தோவின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை தொடங்கிய போலீஸ் நடவடிக்கை இரவு வரையிலும் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாஜக

ஜார்க்கண்டில் மாணவர்கள் போராட்டத்தை அங்கு எதிர்க்கட்சியாக உள்ள பாஜக கையில் எடுத்துள்ளது. மாநில அரசு மாணவர் போராட்டத்திற்கு செவி சாய்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும், ஜார்க்கண்ட் விவகாரத்தில் ராகுல் காந்தியும் காங்கிரஸும் மவுனமாக இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *