கடந்த சில நாள்களுக்கு முன்பு புக்கெட் என்ற இடத்திலிருந்து புதுடெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் திடீரென 300 அடி உயரம் குறைந்தது. இதனால் விமானம் ஆடியதில் அதில் பயணம் செய்த 137 பயணிகளில் 20 பயணிகளும், நான்கு பணியாளர்களும் காயமடைந்தனர்.
இவர்களில் இரண்டு பணியாளர்களுக்கு எலும்பு முறிவு மற்றும் கழுத்துப் பகுதிகளில் தண்டுவடக் காயங்களுக்கும் ஏற்பட்டன. இது போன்ற ஒரு சம்பவம் விமானத்தில் நடக்க வாய்ப்பு குறைவு என்பதால் பைலட் போதைப்பொருள் எதுவும் பயன்படுத்தினாரா என்பது குறித்து சோதனை செய்யப்பட்டது.
கஞ்சா பயன்படுத்திய பைலட்
அந்த விமானத்தை இயக்கிய பைலட்டிற்கு நடத்தப்பட்ட போதைப்பொருள் சோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்தது. அவர் விமானத்தை ஓட்டியபடி கஞ்சா புகைத்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.
இதனை உறுதி செய்து கொள்ள இரண்டாவது முறையாக மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. அந்தச் சோதனையிலும் பைலட் போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஆரம்பக்கட்ட விசாரணையில் விமானம் திடீரென 300 அடி இறங்கியபோது பைலட் அவரது இறுக்கையில் இல்லை என்று தெரிய வந்துள்ளது. விமானத்தை இணை பைலட் இயக்கியுள்ளார். ஏர்பஸ் A320neo திடீரென 300 அடிக்கு இறங்கியபோது விமானம் நெகட்டிவ்-ஜி நிலைக்குச் சென்றது.
மிதந்த பைலட், பயணிகள்
இது பொதுவாக பைலட்டின் தவறு அல்லது தொழில்நுட்ப கோளாறு அல்லது ஹைட்ராலிக் கோளாறு காரணமாக ஏற்படும். விமானம் திடீரென கீழே இறங்கியதால் புவிஈர்ப்பு விசை தற்காலிகமாகத் தலைகீழாகி, சீட் பெல்ட் அணியாத முதன்மை பைலட் மற்றும் பயணிகள் காற்றில் மிதந்து கூரையில் மோதினர்.
சீட் பெல்ட் அணியாமல் நின்றுகொண்டிருந்த முதன்மை விமானி முற்றிலும் நிலைதடுமாறி காற்றில் மிதந்ததால், அவரால் விமானக் கட்டுப்பாட்டுக் கருவிகளை இயக்க முடியாமல் போனது. எனினும் இணை பைலட் சாதுர்யமாகச் செயல்பட்டு விமானத்தைத் தரையிறக்கினார்.