விமான நிலையத்துக்கு NO…சிப்காட்டுக்கு YES…பரந்தூருக்கு புதிய முகம்! – Kumudam

Spread the love

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் ஏகனாபுரத்தில் சென்னைக்கான 2-வது விமான நிலையத்தை அமைக்க, மத்திய அரசுடன் இணைந்து கடந்த திமுக அரசு திட்டமிட்டிருந்தது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, தவெக ஆட்சிக்கு வந்த பிறகு பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த இடம் எதற்காகப் பயன்படுத்தப்படும் என்ற கேள்வி எழுந்தது. இந்தச் சூழலில், பரந்தூர் அருகே உள்ள மதுரமங்கலத்தில் சிப்காட் தொழிற்பூங்காவுக்காக நிலங்களைக் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு தயாராகி வருகிறது.

தொழில் வளர்ச்சியின் காரணமாக செமிகண்டக்டர் எனப்படும் மின்னணுப் பொருளுக்கான தேவை அதிகரித்துள்ளது. முதலமைச்சர் விஜய் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, தற்போது இந்த சிப்காட் பூங்காவில் செமிகண்டக்டர் தொழிற்சாலைகளுடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்துதல்

செமிகண்டக்டர் துறையில் பெரிய அளவிலான முதலீடுகளை ஈர்ப்பதற்காக, மதுரமங்கலத்தில் சிப்காட் மூலம் ரூ.175 கோடி செலவில் செமிகண்டக்டர் மின்னணு உற்பத்திப் பூங்காவை அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பான சுற்றறிக்கையை நில நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்காணி வெளியிட்டுள்ளார்.

அதில், தொழில் பயன்பாட்டுக்காக 8.3280 ஹெக்டேர் நிலம் தேவைப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், கையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள் அனைத்தும் தரிசு நிலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றில் வேம்பு மற்றும் தென்னை மரங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நிலம் கையகப்படுத்தப்பட உள்ள பகுதிகளின் திட்ட வரைபடங்கள் மாவட்ட வருவாய் சிறப்பு அலுவலர் மற்றும் சிறப்பு வட்டாட்சியர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அலுவலக வேலை நாட்களில் எந்த நேரத்திலும் அவற்றை ஆய்வு செய்யலாம் என்றும் ராஜேஷ் லக்காணி தெரிவித்துள்ளார்.

5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

சிப்காட் பூங்காவில் செமிகண்டக்டர் தொழிற்சாலைகளுடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளும் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 5 ஆயிரம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தமிழ்நாட்டின் மின்னணு மற்றும் செமிகண்டக்டர் சூழலியலுக்கு இந்தத் திட்டம் பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரமங்கலத்தில் 166.31.50 ஹெக்டேர் பட்டா நிலம் (410.80 ஏக்கர்) கையகப்படுத்துதல், 4.67.50 ஹெக்டேர் (11.55 ஏக்கர்) அரசு புறம்போக்கு நில உரிமை மாற்றம் மற்றும் அங்கு புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கும் திட்டத்துக்கு, தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்புச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு 5.2.2024 அன்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

தனிநபர் பேச்சுவார்த்தை மூலம் நிலத்தைக் கையகப்படுத்தவும், நில எடுப்புக்கான புதிய பணியிடங்களை ஏற்படுத்தவும், நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கியும் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *