உறுப்பினர்கள் முன்வைத்த கருத்துக்கள்
G.O. 1853-ஐ ரத்து செய்ய வேண்டும். திட்டச் செலவை விவசாயிகளிடம் ஏற்றுவது தவறு; வறண்ட நிலங்கள் பயன்படாமல் போகின்றன. தஞ்சாவூர் மாவட்டம் அரசின் வருவாயில் மிகப் பெரிய பங்காற்றுகிறது. இனாம் நிலங்களுக்கு வரி விதிப்பது முறையற்றது. பழைய பாசன நிலங்களுக்கு கூடுதல் வரி விதிப்பது தவறு. அரசு ரயத்துகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும். நெல் விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகளுக்கு கடும் சுமை; முழுமையான மறுபரிசீலனை அவசியம். நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினர்.
அரசின் பதில் (சர் ஆர்க்கிபால்டு காம்பெல்)
1924-இல் திட்டம் முன்மொழியப்பட்ட போது இந்த விகிதங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. புதிய நிலங்களுக்கு சலுகை விகிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. பாசனச் செலவுகளை ஈடு செய்ய வேண்டியதால், ரூ.15 விகிதம் நியாயமானது. உலர் நிலங்கள் ஈர நிலங்களாக மாறுவதை கட்டுப்படுத்தும் வகையில் உயர் விகிதம் நிர்ணயிக்கப்பட்டது. விலை வீழ்ச்சியால் சிக்கல்கள் இருப்பது உணரப்படுகிறது; எதிர்காலத்தில் குறைப்பை பரிசீலிக்கலாம். ஆனால், உடனடியாக பெரிய மாற்றங்கள் செய்ய இயலாது என்று மறுத்து விட்டார்.
முடிவு
உறுப்பினர்கள் ஒருமனதாக G.O. 1853 விவசாயிகளுக்கு தாங்க முடியாத சுமையைக் கொடுக்கிறது என்று வலியுறுத்தினர். அரசு, திட்டச் செலவை விவசாயிகளின் மீது திணிக்காமல், அவர்களின் செலுத்தும் திறனை கருத்தில் கொண்டு விகிதங்களை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
“இந்த கருத்துகளுடன், அரசாங்கம் முழு விஷயத்தையும் மறுபரிசீலனை செய்து,
தஞ்சாவூர் மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் பட்டது.”
நீர் விகிதம் நேரடியாக ரயத்துகளை பாதிப்பதால், மாரத்தான் போல் விவாதம் நீண்டு நடந்து முடிந்தது. (இங்கே மிகவும் சுருக்கித் தரப்பட்டுள்ளது)
மேட்டூர் அணையால் சேலம் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்பு
மேட்டூர் அணை கட்டுமானம் தொடர்பாக சபையில் கே. ஏ. நாச்சியப்ப கவுண்டர் இந்த அணை எப்போது முடிக்கப்படும், எவ்வளவு நிலப்பரப்பு மூழ்கடிக்கப்படும், எத்தனை கிராமங்கள் அகற்றப்படுகின்றன, எத்தனை வீடுகள் கையகப்படுத்தப்படுகின்றன என்பன குறித்து கேள்வி எழுப்பினார்.
அரசின் பதில், மேட்டூர் அணை 1934ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும். ஜுலையில் திறப்பு விழா காணலாம் என கூறப்பட்டது. நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்பும் போது, சேலம் மாவட்டத்தில் மூழ்கடிக்கப்படும் நிலப்பரப்பின் சரியான அளவு தெரியவில்லை என்றாலும், அது சுமார் “25 சதுர மைல்கள்” என மதிப்பிடப்பட்டுள்ளது என பொத்தாம் பொதுவாக பதில் தரப்பட்டது.
இந்த அணை காரணமாக சேலம் மாவட்டத்தில் 1,496 வீடுகள் கையகப்படுத்தப்பட்டன. ஆனால், கையகப்படுத்துதலால் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறித்து அரசு துல்லியமான தகவல் தர முடியவில்லை என்று தெரிவித்தது. இதன் மூலம், மேட்டூர் அணை பாசன நன்மைகளைத் தருவதோடு, சேலம் மாவட்டத்தில் பல கிராமங்களை இடமாற்றம் செய்யவும், ஆயிரக்கணக்கான மக்களை குடியிருப்பின்றி செய்யவும் காரணமாக இருந்தது என்பது வெளிப்படையாகிறது.
மேட்டூர் திட்டப் பணிகளுக்கு மின்சார ஆற்றல் பயன்பாடு
மேட்டூர் அணை கட்டுவதற்காக மைசூர் அரசாங்கத்திடம் ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்தி, சிவசமுத்திரம் நீர் மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெற்றுக் கொள்ளப்பட்டது குறித்து நாம் ஏற்கனவே அறிந்திருந்தோம். அதன் பயன்பாட்டு விவரங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
| காலம் | பயன்படுத்திய மின்சார அளவு (யூனிட்கள்)
நவம்பர் 1928 – 31 மார்ச் 1929 6,22,532
1 ஏப்ரல் 1929 – 31 மார்ச் 1930 28,89,938
1 ஏப்ரல் 1930 – 31 மார்ச் 1931 45,90,269
100 வருடங்களுக்கு முன்பு சுமுகமான பேச்சுவார்த்தைகள் மூலம் மெட்ராஸ் மாகாண அரசும், மைசூர் அரசும் தங்கள் தேவைகளை தீர்த்துக் கொண்டதற்கான ஒரு அத்தாட்சியாக மேற்கண்ட ஒப்பந்தத்தை கருதலாம்.
இன்றும் அதுபோன்ற வாய்ப்புகளை பயன்படுத்தி நீண்ட கால தீர்வுகளை நோக்கி உரையாடல்கள் ஏற்படுத்தி அந்த முன்னெடுப்புகளால் இரு மாநில விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயன்தரத்தக்க அளவில் சூழ்நிலைகளை மாற்றம் செய்ய வேண்டிய பொறுப்பு அரசியல் தலைவர்கள் மற்றும் அரசுகளிடம் உள்ளது. மக்களிடம் அந்த எதிர்பார்ப்பும் உள்ளது.
தொடர்ந்து பயணிப்போம்!