அந்தப் பஞ்சாயத்துக் காட்சி கமல்ஹாசனின் எழுத்துக்கும், திரைக்கதை அமைப்புக்கும் ஒரு பெரிய எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது. நிஜமான வில்லனான கொத்தாளன், பின்னணியில் இருந்து கொண்டு, நல்லம்ம நாயக்கர் மீதான பழம்பகை, வன்மம் மற்றும் இப்போதைய சொத்துக்கான ஆசை என விருமாண்டியை ஒரு கைப்பாவையைப் போல இயக்கிக் கொண்டிருப்பான்.
விருமாண்டியின் அப்பாவித்தனத்தையும், கொத்தாளனின் வன்மத்தையும் புரிந்துகொண்டிருந்த நல்லம்ம நாயக்கரும், கொண்டராசுவும் அதை எதிர்கொள்ள முடியாமல் திணறுவார்கள். தாம் ஏதோ பெரிய புத்திசாலி போல, நல்லம்ம நாயக்கரை அழுக்கு வேட்டி ஜமீன் என்று நக்கலடித்து, வம்பு பண்ணுவான் விருமாண்டி.
அந்தப் பஞ்சாயத்தின் முடிவே பல சிக்கல்களுக்கான தொடக்கப்புள்ளியாக அமைந்துவிடும். இந்தக் காட்சியில், நல்லம்மராக நெப்போலியன், கொண்டராசுவாக தென்னவன், விருமாண்டியாக கமல்ஹாசன், கொத்தாளனாக பசுபதி ஆகியோர் ஒருவரை ஒருவர் நடிப்பில் விஞ்சியிருப்பார்கள் எனலாம்.

கமல்ஹாசன் இதுவரை மொத்தமே மூன்று படங்களைத்தான் இயக்கியிருக்கிறார். மூன்றுமே தமிழின் ஐகானிக் படங்களாக அமைந்திருக்கின்றன.
ஹேராம், விருமாண்டி, விஸ்வரூபம்!
முன்னதாக, அவ்வை சண்முகியின் இந்தி ரீமேக்கான சாச்சி 420 படத்தை அவர் இயக்கியிருந்தாலும் அது அவர் இயக்க நினைத்த படமல்ல. போலவே, அவரது கனவாக சொல்லப்பட்ட மருதநாயகம் முடிக்கப்பட்டிருந்தால் அதுவே அவரது முதல் படமாகவும் அமைந்திருக்கும். இப்படியான ஹைஸ்கேல் படங்களை மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ, தமிழின் சிறந்த இயக்குநராக, இன்னும் பல படங்களைத் தந்திருக்க வேண்டிய கமல்ஹாசன், இந்த விசயத்தில் நம்மை ஏமாற்றிவிட்டார் என்றுதான் சொல்லமுடியும்.