Tamilnadu
oi-Vignesh Selvaraj
கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூர் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் வெங்கடரமணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விவசாயி ஒருவர், நெல் மூட்டைக்கு ரூபாய் 50 லஞ்சம் கேட்பதாக தெரிவித்த நிலையில், உடனடியாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார். அதன்படி மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் ஆய்வு மேற்கொண்டார். வடலூர் அருகே மருவாய் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் வெங்கடரமணன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது செல்போன் மூலம் விவசாயியை தொடர்பு கொண்ட அமைச்சர் வெங்கடரமணன், லஞ்சம் கேட்கப்படுகிறதா என கேள்வி எழுப்பினார். நெல் மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.60 வரை லஞ்சம் வாங்கப்படுவதாக அமைச்சரிடம் விவசாயி கூறினார்.
லஞ்சம் கேட்டது உறுதியானதையடுத்து நெல் கொள்முதல் நிலைய அதிகாரி உள்ளிட்டவர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய அமைச்சர் பரிந்துரைத்தார். அமைச்சரின் பரிந்துரையை ஏற்று கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா பட்டியல் எழுத்தர் வேல்முருகனை சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
முன்னதாக தரங்கம்பாடி அருகே ஆக்கூரில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலையில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் மாண்புமிகு வெங்கடரமணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆலையின் செயல்பாடு, அரிசி அரைக்கும் திறன் மற்றும் தரக் கட்டுப்பாட்டுப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, பணிகளை விரைவாகவும் தரமாகவும் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.