வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா? விஜய்க்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்! – Kumudam

Spread the love

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், மிசா சட்டத்தின் கீழ் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது தொடர்பாகத் தாடையில் கைவைத்து முதலமைச்சர் விஜய் செய்த சைகை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக மற்றும் கம்யூனிஸ்ட் தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அது எதேச்சையாகச் செய்த சைகை என முதலமைச்சர் விஜய் விளக்கமளித்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்தும் அரசின் செயல்பாடுகள் குறித்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு ஒன்றின் மூலம் முதலமைச்சர் விஜய்க்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

மிசா கைது குறித்து விளக்கம்

சட்டப்பேரவையில் நடந்த சம்பவங்கள் தமிழ் மக்களுக்கும் திமுக தொண்டர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், 1976-இல் அவசரநிலைக் காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் தான் கைது செய்யப்பட்ட நிகழ்வுகளை விவரித்தார். “தொழுநோயாளிகள் இருந்த சிறிய அறையில் 10 பேருடன் அடைக்கப்பட்டு, இரவில் லத்தியாலும் பூட்ஸ் கால்களாலும் தாக்கப்பட்டோம். அந்தத் தாக்குதலில் என் அண்ணன் சிட்டி பாபு சிறையிலேயே உயிரிழந்தார். அப்போது வாங்கிய அடியில்தான் என் தாடை எலும்பு உடைந்தது; அதற்கான தழும்பு இன்றும் என்னிடம் இருக்கிறது” என்று தெரிவித்தார். மேலும், சட்டமன்ற நூலகத்தில் உள்ள ஆவணங்களைப் படித்து திமுகவின் போராட்ட வரலாற்றைத் தெரிந்துகொள்ளுமாறு முதலமைச்சர் விஜயைக் கேட்டுக்கொண்டார்.

சொன்னத மறந்துட்டீங்களா?”

முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு தன்னைச் சந்திக்க வீட்டிற்கு வந்த நிகழ்வை சுட்டிக்காட்டிய மு.க.ஸ்டாலின், “அப்போது ‘பிரச்சாரத்தில் உங்களை விமர்சித்துப் பேசிவிட்டேன், சாரி சார்’ என்று நீங்கள் கூறியபோது, ‘பரவாயில்லை பிரதர்’ எனக் கடந்து சென்றேன். அதை நீங்கள் மறந்துவிட்டீர்கள் போலிருக்கிறது. ஒரு முதலமைச்சருக்கான கண்ணியத்துடன் உங்களுடைய வார்த்தைகளும் உடல்மொழியும் இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார். அத்துடன் சர்காரியா கமிஷன் மற்றும் கலைஞர் குறித்துத் தவறான தகவல்களை முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் பேசியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

“வாய்திறக்கவில்லை”

தவெக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகச் சாடிய அவர், அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும் கேள்விகளை எழுப்பினார். பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்ததன் மூலம் தமிழகத்தின் வளர்ச்சியை 15 ஆண்டுகள் பின்னோக்கிக் கொண்டு சென்றுவிட்டதாகச் சாடினார். விவசாயிகளுக்கான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும், ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர் என்று வாக்குறுதி அளித்துவிட்டுத் தற்போது தகுதியுள்ளவர்களுக்கு 3 சிலிண்டர் என மாற்றியிருப்பதாகவும், மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 தருவதாகக் கூறிவிட்டு இன்னும் ரூ.1,000 மட்டுமே வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், பெரும்பாலான வாக்குறுதிகள் குறித்து வாய் திறக்கவில்லை என்றும் விமர்சித்தார்.

“விதவிதமான ரீல்ஸ்”

சட்டமன்றத்தின் மாண்பைக் காக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், “விதவிதமான ரீல்ஸ் போட்டு ஒரு தலைமுறையையே வீணாக்கி வருகிறீர்கள். சட்டமன்றத்தை ரீல்ஸ் எடுக்கும் இடமாக மாற்றி, நாங்கள் கட்டிய பாலத்தில் நின்று போட்டோஷூட் செய்கிறீர்கள்” என்று சாடினார். இறுதியாக, தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றாலும் மக்களுக்காகத் தொடர்ந்து சண்டை செய்ய வேண்டும் என்று திமுக தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *