இவ்வாறு வணங்கி வழிபட்டால், தடைகள் மற்றும் தோஷங்கள் நீங்கி விரைவில் வீட்டில் கெட்டிமேளம் கொட்டும் என்பது நம்பிக்கை. குறிப்பாக இந்தப் பரிகாரத்தை அவரவர் ஜன்ம நட்சத்திர நாளன்று, அதிகாலை 5 முதல் 7 மணிக்குள் செய்து முடிப்பது சிறப்பு.
கந்தசஷ்டி காலத்தில் முறைப்படி விரதம் இருந்து, நதிக்கரை முருகன் கோயிலுக்கு வந்து வழிபடவேண்டும். கந்த சஷ்டி விழாவையொட்டி முருகனுக்கு நடைபெறும் திருக்கல்யாணம் – ஊஞ்சல் உற்சவத்தன்று முருகனுக்கும், வள்ளி – தெய்வானை தேவியருக்கும் ரோஜா மாலை சாத்தி வழிபடவேண்டும். இதன் மூலம் இல்லறம் இனிக்கும்; மன வேறுபாட்டால் பிரிந்த தம்பதி ஒன்றுசேர்வர், என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

தைப்பூசத் திருநாளில் கோயிலின் பாலதண்டாயுத சுவாமிக்குச் சிறப்பு அபிசேகமும், விசேச தீபராதனையும் நடைபெறுகின்றன. இந்த வைபவத்தை தரிசிப்பதால் சகல தடைகளும் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
நதிக்கரைக் கோயில் என்பதால், அருகிலுள்ள பல கோயில்களுக்கு வேண்டுதல் செய்யும் பக்தர்கள் இங்கிருந்து நதித் தீர்த்தம், பாற்குடம் எடுத்துச் செல்கிறார்கள். ஆடி மற்றும் தை அமாவாசை நாள்களில், இங்கு நதிக்கரையில் முன்னோர் தர்ப்பணம் செய்து வழிபடுவதும் விசேஷமாகக் கருதப்படுகிறது.
நவகயிலாய தலங்கள், நவதிருப்பதிகளை தரிசிக்கச் செல்லும் அன்பர்கள், அவசியம் இந்த நதிக்கரை முருகனையும் தரிசித்து வழிபட்டு வாருங்கள். இந்த முருகனின் திருவருளால் உங்கள் வாழ்வில் சகல இன்னல்களும் நீங்கி சந்தோஷம் பொங்கிப் பெருகும்.