Tamilnadu
oi-Vishnupriya R
தென்காசி: தென்காசி மாவட்டம், வீ.கே.புதூர் (வீரகேரளம்புதூர்) அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளை ஆசிரியர் தேன் மரிய சுகந்தி, கம்பால் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து வீ.கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் பள்ளி வளாகத்தில் 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் விளையாடி சத்தம் போட்டதாகக் கூறி, ஆசிரியர் வகுப்பறைக்குள் சென்று கம்பால் சரமாரியாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் சுஜித்ரா, பவித்ரா, சரண்யா, சாய்ஶ்ரீ, ஆஷா, சந்தன முத்துமாரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கைகளில் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
காயமடைந்த மாணவிகளில் பவித்ரா மற்றும் சுஜித்ரா வீ.கே.புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பின்னர் பவித்ரா மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு 3 நாட்கள் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றாராம்.
சுஜித்ரா ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சரண்யா, சாய்ஶ்ரீ, ஆஷா, சந்தன முத்துமாரி உள்ளிட்ட மாணவிகள் தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கைகளில் இன்னும் வீக்கம் இருப்பதால், பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் ஓய்வில் இருப்பதாக பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மாணவி பவித்ராவின் தாய் ராஜாத்தி வீ.கே.புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், ஆசிரியர் தேன் மரிய சுகந்தி மீது BNS சட்டம் பிரிவு 115(2) மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வீ.கே.புதூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.