கடந்த சில நாள்களாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாகி, சில இடங்களில் வெப்ப அலையும் பதிவாகி வருகிறது. குறிப்பாக சென்னை, வேலூர், திருத்தணி, கரூர் போன்ற பகுதிகளில் வெப்பநிலை 40° செல்சியஸை தாண்டியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வந்தாலும், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெப்பம் நீடித்தே வருகிறது. மேலும் சில நாள்களுக்கு வெப்பம் அதிகரிக்கும், கோடை காலம் கூடுதல் நாள்கள் நீடிக்கலாம் எனவும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.
அதீத வெப்பம், உடல் சோர்வு, மயக்கம் போன்ற பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும் நிலையில், கண் தொடர்பான பல்வேறு பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது பற்றி பேசிய சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் இ.ரவீந்திர மோகன், “கடந்த சில வாரங்களாகக் கடுமையான கோடை கால வெப்பமும், அதிகப்படியான ஈரப்பதமும் நிலவி வருகிறது. இந்த வானிலையால் ஏற்படும் அசௌகரியங்களுடன், கண்களில் ஒவ்வாமை (Allergy), வறட்சி , எரிச்சல், கண் சிவத்தல், அரிப்பு, நீர் வடிதல் மற்றும் கண் சோர்வு போன்ற அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது.