India
oi-Halley Karthik
போபால்: மத்தியப் பிரதேசத்தில் ரூ.250 கொடுத்து நிலத்தை லீஸுக்கு எடுத்த நண்பர்கள் 7 பேர்.. சுரங்கம் தோண்டி ரூ.50 லட்சம் மதிப்புக்கொண்ட வைரத்தை கண்டெடுத்துள்ளனர். இது அவர்களின் வாழ்க்கையை மாற்றும் என்று கூறுகின்றனர்.
மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் வைரம் தோண்டுவதற்காக அரசு சிறு சிறு நிலப் பகுதிகளை மிகக் குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு குத்தகைக்கு வழங்கும். இப்படித்தான் அகிலேஷ் பால் மற்றும் அவரது 6 நண்பர்கள் சேர்ந்து ரூ.250 கொடுத்து நிலத்தை லீஸுக்கு எடுத்திருக்கிறார்கள்.

இவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக நிலத்தில் சுரங்கம் தோண்டி வந்திருக்கின்றனர். எவ்வளவு தோண்டியும் மண்ணை தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. எனவே ஒரு கட்டத்தில் கடும் மனச்சோர்வு ஏற்பட்டது. ஒரு வருஷத்திற்கு நிலத்தை தோண்டாமல் மூடி வைத்துவிட்டனர். இதையடுத்து சமீபத்தில் அந்த பகுதியில் மழை பெய்திருந்தது. மழைக்கு பிறகு நிலத்தை பார்வையிட இவர்கள் போயிருக்கிறார்கள். அங்கு வைரம் போல ஏதோ மின்னியிருக்கிறது. சந்தேகமடைந்த அவர்கள் அந்த கல்லை எடுத்து சோதித்திருக்கின்றனர்.
செக் செய்து பார்த்ததில் அது 17.96 கேரட் எடை கொண்ட உயர்தர வைரம் என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த வைரத்தின் மதிப்பு ரூ.50 லட்சமாகும். இந்த வைரம் வரும் அக்டோபர் மாதம் அரசு ஏலத்தில் விடப்படும். விற்பனை தொகையில் 12% அரசுக்கு வரியாக போகும். இதையடுத்து மீதி தொகை இந்த 7 பேருக்கு பிரித்து வழங்கப்படும்.
இந்த நிலங்களில் பொதுவாக பண்ணையாருக்காக தொழிலாளர்கள்தான் வேலை பார்ப்பார்கள். எனவே வைரம் கிடைத்தாலும் அதில் இந்த தொழிலாளர்களுக்கு எந்த லாபமும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.