Cricket
oi-Yogeshwaran Moorthi
தரம்சாலா: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டனும், நட்சத்திரத் தொடக்க ஆட்டக்காரருமான சுப்மன் கில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பிரம்மாண்டமான வரலாற்றுச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகத் தரம்சாலாவில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது, ஒருநாள் போட்டிகளில் தனது 3,000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்து அசத்தினார்.
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் 3,000 ரன்களைக் கடந்த ‘இந்திய வீரர்’ என்ற மாபெரும் வரலாற்றுப் பெருமையை சுப்மன் கில் தன்வசப்படுத்தியுள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 3,000 ரன்களைக் கடக்க இந்திய அளவில் இதற்கு முன்பு பல ஜாம்பவான்கள் நீண்ட இன்னிங்ஸ்களை எடுத்துக் கொண்டுள்ளனர். ஆனால் கில், அந்த சாதனைகளை மிக எளிதாக முறியடித்துள்ளார்.

சுப்மன் கில் தனது 61ஆவது ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்ஸிலேயே 3,000 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டிப் புதிய இந்திய சாதனையைப் படைத்தார். இதற்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஷிகர் தவான் 72 இன்னிங்ஸ்களிலும், ‘ரன் மெஷின்’ விராட் கோலி 75 இன்னிங்ஸ்களிலும் 3,000 ரன்களைக் கடந்ததே இந்திய அளவில் சாதனையாக இருந்தது.
தற்போது இவர்கள் இருவரையும் பின்னுக்குத் தள்ளி சுப்மன் கில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 3,000 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சுப்மன் கில் 2ஆவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். இப்பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் ஹாசிம் ஆம்லா 57 இன்னிங்ஸில் 3 ஆயிரம் ரன்களை விளாசி முதலிடத்தில் நீடிக்கிறார்.
கில் அவருக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் இருக்கிறார். தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸின் ஷாய் ஹோப், பாகிஸ்தானின் ஃபகார் ஜமான் மற்றும் இமாம்-உல்-ஹக் தலா 67 இன்னிங்ஸ்கள் 3 ஆயிரம் ரன்களை எட்டி அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர். இந்தப் போட்டி மழை காரணமாக 25 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி ரஹ்மானுல்லா குர்பாஸின் அதிரடி சதம் காரணமாக 25 ஓவர்களில் 194 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணியில், கேப்டன் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி 66 பந்துகளில் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 84 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். சுப்மன் கில் இந்திய அணியின் தூணாக உருவெடுத்துத் தொடர்ந்து உலக சாதனைகளைப் படைத்து வருவது ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.