சென்னை உள்ளகரம் கிருஷ்ணா நகர், திலகர் தெருவில் அமைந்திருக்கிறது பழைமையான விஜய கணபதி திருக்கோயில். இந்தப் பகுதியின் அடையாளமாகத் திகழும் இந்தக் கோயிலுக்கு மகாபெரியவர் முதலான மகான்கள் பலரும் வருகை தந்து தரிசனம் செய்து இத்தலத்தின் மகிமைகளையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
மேலும் இந்த விநாயகர் காரியத் தடைகளை அகற்றி வெற்றியைக் கொடுப்பார் என்பதை உணர்ந்த மகாபெரியவர் 1975 – ம் ஆண்டு, “‘இந்த ஸ்வாமிக்கு ஸ்ரீவிஜயகணபதின்னே பேர் வைங்கோ” என்று திருநாமம் சூட்டி அருளினார். அன்றுமுதல் இன்றுவரை இந்த விநாயகர் உள்ளகரத்தில் நிகழ்த்திய அற்புதங்கள் பலப்பல.

கவலையோடு இந்த விநாயகரின் சந்நிதிக்கு வந்து வேண்டிக்கொண்டால் விரைவில் அக்கவலைகள் தீர வழிபிறக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
குறிப்பாக நல்ல வேலை கிடைக்காதவர்கள், பார்க்கும் வேலையில் பிரச்னை இருக்கிறது என்று வருந்துபவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து விஜயகணபதியைத் தரிசனம் செய்து அவருக்கு ஒரு தேங்காய் உடைத்து வழிபட்டுச் சென்றால் கூடிய விரைவில் நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் விலகும் என்பது நம்பிக்கை.
பிள்ளையார் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிரியமானவர். இந்தப் பிள்ளையாரை நிறைய குழந்தைகள் பிரியத்துடன் வந்து வழிபட்டுச் செல்வர். அப்படித் தன்னை வந்து வணங்கும் குழந்தைகளுக்குக் கல்வியில் நல்ல முன்னேற்றம் கொடுத்துப் பேரும் புகழும் அடைய வைப்பார் இந்த விநாயகர் என்கிறார்கள். மேலும் இந்தப் பகுதி மிகவும் சிறப்புடன் திகழக் காரணமும் இந்த விஜயகணபதிதான் என்கிறார்கள் ஊர் மக்கள்.