‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’ சென்னையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் நோக்கிலும் ரூ.67,452 கோடி முதலீடு மற்றும் 1,06,998 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் 55 புதிய (Greenfield) திட்டங்களும், 50 விரிவாக்கத் (Brownfield) திட்டங்களும் அடங்கும். தமிழகத்தில் தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாள்களில் மொத்தம் ரூ.1,02,514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 1,21,788 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இம்மாநாட்டில் விண்வெளி, மின்னணுவியல், மோட்டார் வாகனம் மற்றும் ஜவுளி போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. தூத்துக்குடியில் தனியார் ஏவுகலன் உற்பத்திக்காக ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (ரூ.250 கோடி) மற்றும் அக்னிகுல் காஸ்மோஸ் (ரூ.400 கோடி) ஆகிய நிறுவனங்களும், கிருஷ்ணகிரியில் அல்ட்ராவயலட் நிறுவனம் (ரூ.779 கோடி) மின்சார வாகன உற்பத்தி ஆலையையும் அமைக்கவுள்ளன.
சென்னையின் முன்னணி நிறுவனமான சூப்பர் மைக்ரோ (ரூ.477 கோடி), திருவள்ளூரில் YKK நிறுவனம் (ரூ.1,651 கோடி), காஞ்சிபுரத்தில் ஜெர்மனியின் BITZER நிறுவனம் (ரூ.300 கோடி) ஆகியவை புதிய திட்டங்களைத் தொடங்குகின்றன.
மேலும், JK டயர் (ரூ.5,143 கோடி), டைம்லர் (ரூ.4,000 கோடி) மற்றும் ஆவிட் குழுமம் (ரூ.7,000 கோடி) ஆகிய நிறுவனங்கள் பெரிய அளவிலான முதலீட்டு விரிவாக்கங்களை அறிவித்துள்ளன. இத்திட்டங்கள் ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாகச் செயல்படுத்தப்படவுள்ளன.