Cricket
oi-Yogeshwaran Moorthi
பெங்களூர்: துலீப் டிராபி தொடரில் வடக்கு மண்டல அணிக்கு எதிரான போட்டியில் கிழக்கு மண்டல அணிக்காக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசிய வைபவ் சூர்யவன்ஷி, அதே ஓவரில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ரெட் பால் கிரிக்கெட் உங்களை அன்புடன் வரவேற்கிறது என்று ரசிகர்கள் வைபவ் சூர்யவன்ஷியை வரவேற்று வருகின்றனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாராக வைபவ் சூர்யவன்ஷி உருவெடுத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இருக்கும் வைபவ் சூர்யவன்ஷி, விரைவில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2027 உலகக்கோப்பை தொடருக்கு பின் வைபவ் சூர்யவன்ஷி ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகலாம் என்று தெரிகிறது.

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் வைபவ் சூர்யவன்ஷி எப்போது அறிமுகம் செய்யப்படுவார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனென்றால் விராட் கோலிக்கு பின் ரசிகர்களை அதிகளவில் ஈர்க்கும் வைபவ் சூர்யவன்ஷி, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், அது சர்வதேச கிரிக்கெட்டுக்கு நன்மையை ஏற்படுத்தும் என்று பார்க்கப்படுகிறது.
இதனாலேயே வாஹன் உட்பட பலரும் வைபவ் சூர்யவன்ஷியின் டெஸ்ட் அறிமுகத்தை எதிர்பார்த்திருக்கின்றனர். இந்த நிலையில் வைபவ் சூர்யவன்ஷியை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தயார்படுத்தும் விதமாக துலீப் டிராபியில் சேர்க்கப்பட்டுள்ளார். கிழக்கு மண்டல அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட்டிருக்கிறார்.
வடக்கு மண்டல அணிக்கு எதிரான போட்டியில் கிழக்கு மண்டலம் அணிக்காக அபிமன்யூ ஈஸ்வரன் – வைபவ் சூர்யவன்ஷி ஜோடி தொடக்கம் கொடுத்தது. 2வது ஓவரில் வைபவ் சூர்யவன்ஷி அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசி தள்ளினார். அந்த ஓவரின் கடைசி பந்தை பிஷ்வோர்ஜித் குட் லெந்தில் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் உடன் வீச, அதனை அடிக்க முயன்று ஸ்லிப் திசையில் வைபவ் சூர்யவன்ஷி கேட்ச் கொடுத்தார்.
வைபவ் சூர்யவன்ஷியின் விக்கெட்டை வீழ்த்திய பின் ஃபீல்டர், பவுலர் என்று அனைவரும் துள்ளிக் குதித்தனர். அதேபோல் ரசிகர்கள் வைபவ் சூர்யவன்ஷியை வெல்கம் டூ ரெட் பால் கிரிக்கெட் என்று வரவேற்று வருகின்றனர். தொடக்கம் இப்படி தான் இருக்கும், கொஞ்சம் நிதானமாக ஆடினால் நிச்சயமாக பெரிய ஸ்கோரை எடுப்பார் என்று ரசிகர்கள் அவருக்கு நம்பிக்கை ஊட்டி வருகின்றனர்.