கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரம் பகுதியைச் சேர்ந்த விக்டர் தாமஸ் – லென்ஸி தம்பதியின் மகன் கவின் ஜெனில் (16).
இவர் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். விக்டர் தாமஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் ரத்தினபுரம் வடக்குத் தெருவில் வசித்து வருகின்றனர்.
நேற்று அவர் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், கவின் ஜெனில் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். தந்தை வேலைக்குச் சென்ற சிறிது நேரத்தில் வீட்டின் முன்பக்கக் கதவை வெளிப்பக்கமாகப் பூட்டிய கவின் ஜெனில், தனது பாட்டியிடம் வெளியே சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
ஆனால் சிறிது நேரத்திலேயே வீட்டின் பின்பக்கக் கதவு வழியாக மீண்டும் வீட்டிற்குள் சென்ற கவின் ஜெனில், அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டின் உள்ளிருந்து கூச்சலிடும் சத்தம் வருவதைக் கேட்ட அவரது பாட்டி உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது கவின் ஜெனில் தூக்கில் தொங்கிய நிலையில் துடித்தபடி கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டதால், அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மாணவர் கவின் ஜெனிலை மீட்டு பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், கவின் ஜெனில் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மாணவர் கவின் ஜெனிலின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து அவரது தாயார் லென்ஸி பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மாணவரின் தாய் லென்ஸி அளித்த புகாரில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வகுப்பில் உடன் படித்த மாணவி ஒருவருடன் சிரித்துப் பேசியதற்காக ஆசிரியர்கள் தனது மகனைக் கண்டித்ததாகவும், அதனால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாகவே மகன் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறியிருக்கிறார்.
அவரது புகாரின் அடிப்படையில் பூதப்பாண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆசிரியர்கள் கண்டித்ததே மாணவரின் தற்கொலைக்குக் காரணம் என்று கூறி சக மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.