பந்துவீச்சில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் அசத்தி, தனது ஆல்-ரவுண்டர் திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக களமிறங்கியக் போட்டியில், தனது சிறப்பான ஆட்டத்திற்கான ரகசியம் என்ன என்பதைப் பற்றி அவர் பேசியுள்ளார். வேகத்தைக் காட்டிலும், சரியான ரிதம் மற்றும் லென்த்தில் கவனம் செலுத்தியதே தனது வெற்றிக்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரிதம்தான் முக்கியம், வேகம் அல்ல!
போட்டிக்குப் பிறகு தனது பந்துவீச்சு குறித்துப் பேசிய சுந்தர், “நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த ஃபார்மெட்டில் விளையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. முதல் பந்திலிருந்தே எனக்கு சரியான ரிதம் கிடைத்தது போல உணர்ந்தேன். அது ஒரு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தது.
நான் மெதுவாக பந்துவீச முயற்சித்தீர்களா என்று கேட்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. நான் வேகத்தைப் பற்றி பெரிதாக யோசிக்கவே இல்லை. எனது ரிதத்தை சரியாகப் பெறுவதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தினேன். முந்தைய நாள் பயிற்சியின் போதே பந்து என் கையிலிருந்து மிகச் சரியாக வெளியேறியது. இந்தப் போட்டியிலும் அதனை தொடர விரும்பினேன், அதிர்ஷ்டவசமாக அது நடந்தது” என்றார்.
ஸ்லோ விக்கெட்… லெங்த்தான் கேம் சேஞ்சர்!
ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப தனது பந்துவீச்சு முறையை மாற்றியமைத்தது பற்றியும் சுந்தர் பேசினார். “இந்த ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக (slow) இருந்தது. அதனால், சரியான லென்த்தில் பந்துவீசுவது மிகவும் அவசியமாக இருந்தது.
நீங்கள் ஒரு குட் லென்த்திலோ அல்லது கொஞ்சம் பேக் ஆஃப் லெங்த்திலோ வீசினால், பேட்ஸ்மேன்களுக்கு பேக் ஃபூட்டில் சென்று பந்தை எதிர்கொள்ள போதுமான நேரம் கிடைத்துவிடும். அதனால், இந்த விக்கெட்டில் லென்த்தை மிகத் துல்லியமாகப் பிடிப்பது சவாலாகவும், முக்கியமாகவும் இருந்தது. எனது அடிப்படைகளை சரியாக வைத்துக்கொண்டு, ஸ்டம்ப்ஸை ஒட்டி பந்துவீசினேன். ஆட்டத்தின் இறுதிப் பகுதியில் மட்டும் கொஞ்சம் வேகமாக வீச முயற்சித்தேன்” என்று தனது வியூகத்தை வெளிப்படுத்தினார்.
பேட்டிங்கிலும் அரைசதம்… டி.ஆர்.எஸ் தவறுகள் சகஜம்!
பந்துவீச்சில் மட்டுமல்லாது, பேட்டிங்கிலும் அரைசதம் கடந்து அசத்தினார் சுந்தர். இதுபற்றிப் பேசுகையில், “பந்து மற்றும் பேட் இரண்டிலுமே சிறப்பாகச் செயல்பட்டது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. பேட்டிங்கில் ஒரு நல்ல ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க விரும்பினேன். அந்த இன்னிங்ஸை நான் அணுகிய விதம் திருப்தியளிக்கிறது” என்றார். மேலும், போட்டியின்போது எடுக்கப்பட்ட சில தவறான டி.ஆர்.எஸ் முடிவுகள் குறித்த கேள்விக்கு, “அது விளையாட்டின் ஒரு அங்கம். எங்களது கடந்த கால அனுபவங்கள் மற்றும் அந்த நேரத்தில் எங்களது உள்ளுணர்வு சொல்வதை வைத்து முடிவெடுக்கிறோம். தொழில்நுட்பத்தை எங்களால் முடிந்தவரை சிறப்பாகப் பயன்படுத்த முயற்சிக்கிறோம். சில நேரங்களில் அது சரியாக அமையாது, அதுவும் ஒரு அனுபவம்தான்” என்று நிதானமாகப் பதிலளித்தார்.