பெங்களூருவில் சனிக்கிழமை நடைபெற்ற “தி இந்து’ நாளிதழின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத்தில் ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ‘ஹைட்ரா’ (HYDRAA) அமைப்பு குறித்துப் பேசினார். அப்போது, “அடால்ஃப் ஹிட்லருக்கு மிகவும் பிடித்த வார்த்தை ‘ஹைட்ரா’. யாரை வேண்டுமானாலும் படுகொலை செய்யக்கூடிய அவரது முக்கியக் குழுவிற்கு ‘ஹைட்ரா’ என்றுதான் பெயரிடப்பட்டது. ஹிட்லரின் அந்த அமைப்பை உத்வேகமாகக் கொண்டுதான், நான் இந்தத் திட்டத்திற்கு ‘ஹைட்ரா’ என்று பெயரிட்டேன்” எனக் குறிப்பிட்டார். மேலும், இந்த அமைப்பின் இடிப்பு நடவடிக்கைகளை ஈரான் – இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நடக்கும் போர்ச் சேதங்களுடனும் ஒப்பிட்டுப் பேசினார்.

ஜனநாயக நாட்டின் முதலமைச்சர் ஒருவர், உலகமே வெறுக்கும் ஒரு பாசிச சர்வாதிகாரியைத் தங்களுக்கு உத்வேகம் என்று பொதுமேடையில் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ரேவந்த் ரெட்டியின் இந்த கருத்து அதிர்ச்சியளிப்பதோடு, ஜனநாயக சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம். உலகம் கண்ட மிகப்பெரிய பாசிசவாதியை பகிரங்கமாக வழிபடும் ஒரு முதலமைச்சரைக் காங்கிரஸ் கட்சி கொண்டிருப்பது வெட்கக்கேடானது.