பிரார்த்தனை நிறைவேறினால் கோயிலில் மணி கட்டுவதாக வேண்டிக்கொள்ளும் வழக்கம் பல தலங்களில் உள்ளது. அப்படிக் கட்டப்பட்ட மணிகளை ஒரு மரம் ஏற்றுக்கொள்ளும் விதமாக விழுங்கிவிடுகிறது என்றால் ஆச்சர்யமாக உள்ளதல்லவா… ஆம் அப்படி இரு தலம் நெல்லை மாவட்டத்தில் இருக்கிறது. நெல்லை மாவட்டம் பாபநாசத்திலிருந்து காரையார் அணைக்குச் செல்லும் பாதையில் அமைந்திருக்கிறது இந்த ஆலயம். வாருங்கள் அந்தத் தலத்தின் மகிமைகளையும் அற்புதங்களையும் தியானிப்போம்.
பொதிகை மலைச் சாரலில் அமைந்திருக்கிறது சொரிமுத்து ஐயனார் கோயில். சாஸ்தாவின் ஆறு முக்கியத்தலங்களில் முதல் தலமாகத் திகழ்வதும் இந்த ஆலயம்தான். இங்குதான் இந்தக் கலியுகத்திலும் பல்வேறு அற்புதங்கள் நடைபெறுகின்றன. அப்படி ஒரு அற்புதம்தான் இலுப்பை மரம்.

சொரிமுத்து ஐயனாரிடம் மனமுருக வேண்டினால் தீராத வினையில்லை… கிடைக்காத வரம் இல்லை என்பார்கள். தங்கள் பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு ஒரு மணியை இங்குள்ள ஓர் இலுப்பை மரத்தில் கட்டுகிறார்கள்.
அவர்களின் பிரார்த்தனை நிறைவேறிவிட்டால், மரம் மணிகளை விழுங்குவது போன்று, மணிகள் மரத்தில் பதிந்து விடுகின்றன. எனவேதான் இதை, “மணி விழுங்கி மரம்’ என்றே அழைக்கிறார்கள்.
அகத்தியர் பொதிகை மலையில் தவம் செய்தபோது ஓர் ஆடி அமாவாசை திதிநாளில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. மிகப் பிரகாசமான ஜோதி ஒன்று அவருக்குப் புலப்பட்டது. முனிவர் ஞானதிருஷ்டியால் அது யார் எனப் பார்த்தபோது சகல பரிவார கணங்கள் புடைசூழ, பூர்ணா-புஷ்கலா சகிதம், ஆதிபூதநாத ஸ்வரூபத்துடன் அவருக்குக் காட்சியளித்தார் மகா சாஸ்தா.