தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை எண்ணப்படுகிறது. எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பு முடிவுகள் கலவையாக இருந்ததால் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்கிற குழப்ப நிலை தொடர்வதாகப் பலரும் சொல்கிறார்கள்.
த.வெ.க இந்தத் தேர்தலில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பரவலாகப் பேசப்படுகிறது. த.வெ.க தலைவர் விஜய் நம்பிக்கையோடு தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கிறார்.
தனக்கும், தன் கட்சி வேட்பாளர்களுக்கும் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக திருச்செந்தூர் முருகன், சீரடி சாய்பாபா ஆகிய வழிப்பாட்டு தலங்களில் விஜய் வழிபாடு செய்தார்.

இதையடுத்து நேற்று வேளாங்கண்ணி சர்ச், நாகூர் தர்ஹாவிற்கு விஜய் வர இருப்பதாக முன்கூட்டியே தகவல் வெளியானது. அதிகாலை வேளாங்கண்ணி சர்ச்சில் நடைபெறும் திருப்பலியில் விஜய் கலந்து கொள்கிறார் என்கிற தகவல் பரவியது.
இதனால் நேற்று அதிகாலையிலேயே த.வெ.க தொண்டர்கள் விஜய்யைக் காண்பதற்கு வேளாங்கண்ணி சர்ச் முன்பு திரண்டனர். சர்ச் உள்ளேவும், முகப்புப் பகுதியிலும் பெரும் கூட்டம் கூடியதால் வழிபாட்டிற்கு வந்தவர்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
இந்நிலையில், விஜய் வேளாங்கண்ணி வருகை ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் விஜய்யைக் காண காத்திருந்த தொண்டர்கள் அப்செட் ஆகினர். பின்னர் விஜய் வருகை ரத்து செய்யப்பட்டதாக உறுதியான தகவல் வெளியானது.
இதைதொடர்ந்து ஏமாற்றமடைந்த சர்ச்சுக்குள் இருந்த தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் டி.வி.கே, டி.வி.கே எனக் கோரஸாகக் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது இந்தச் சம்பவம் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.